பர்சனல் ஃபினான்ஸ்
எஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!

வீட்டுக் கடன், வாகன கடன் உள்ளிட்ட சில்லறை கடன்களைச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை, 2 ஆண்டுகள் வரை நீட்டத்துக்கொள்ளாம் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன், தனிநபர் கடன், வாகன உள்ளிட்ட பல்வேறு சில்லறை கடன்களைப் பெற்று இருந்து, கோவிட்-19 ஊரடங்கால் அதை செலுத்த முடியாமல் போயிருந்தால், அதைத் திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் 2 ஆண்டுகள் வரை நீட்டித்து வழங்க எஸ்பிஐ முடிவு செய்துள்ளது.
2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 1-ம் தேதிக்குள், எஸ்பிஐ வங்கியில் கடன் பெற்று அதற்கான தவணையை தவறாமல் ஒவ்வொரு மாதமும் கட்டி வந்து இருந்தால், எஸ்பிஐ வங்கி இந்த கடன் தவணையைத் தவறாமல் திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடித்து வழங்கும்.
இந்த 2 ஆண்டு கடன் மறூசீரமிப்பு நீட்டிப்பு திட்டத்தைத் தேர்ந்தெடுத்தால், வாடிக்கையாளரின் கடன் திட்டத்தின் மீது 0.35 சதவீதம் கூடுதல் வட்டி விகிதம் விதிக்கப்படும்.
எஸ்பிஐ வங்கியின் இந்த கடன் மறு சீரமைப்பு திட்டத்தைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் முதலில், எஸ்பிஐ வங்கி இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் சம்மந்தப்பட்ட வங்கி கிளையை அணுகி தவணை கால அவகாசத்தை நீட்டித்துக்கொள்ளலாம்.
எஸ்பிஐ வங்கியை தொடர்ந்து, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கிகளும் கடன் மறுசீரமைப்பு அறிவிப்பை வெளியிட வாய்ப்புகள் உள்ளது.
எஸ்பிஐ வங்கியின் கடன் மறு சீரமைப்பு திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

எஸ்பிஐ வங்கியின் https://sbi.co.in/ இணையப் பக்கத்திற்குச் சென்று, கடன் மறுசீரமைப்புக்கான தகுதியை அறிந்துகொள்வதற்கான தெரிவை கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர் உங்கள் கடன் கணக்கு எண்ணை உள்ளிட வேண்டும். அதன் பிறகு ஒரு முறை கடவுச்சொல் அந்த கடன் திட்டத்துடன் தொடர்புடைய மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும். அதை உள்ளிட்ட பிறகு நீங்கள் பெற்ற கடனுக்கான மறுசீரமைப்புக்கான கோரிக்கை ஏற்கப்படும்.
எஸ்பிஐ வங்கி கடன் மறுசீரமைப்பு கோரிக்கையை எப்போது வரை அளிக்க முடியும்?
எஸ்பிஐ வங்கியில் கடன் பெற்று, அதைச் சரியாகத் தவணை தவறாமல் செலுத்தி வரும் வாடிக்கையாளர்கள், 24.12.2020-ம் தேதிக்குள் கடன் மறுசீரமைப்புக்கான கோரிக்கையை வைக்கலாம்.
ஒன்றுக்கு மேற்பட்ட கடன் பெற்று இருந்தாலும் மறுசீரமைப்பு பெற முடியுமா?
எஸ்பிஐ வங்கியின் ஒன்றுக்கு மேற்பட்ட சில்லறை கடன்களைப் பெற்று இருந்தாலும், எல்லா கடனுக்கான தவணை காலத்தையும் மறு சீரமைப்பு செய்து நீட்டிக்க முடியும்.
எத்தனை நாட்களில் கடன் தவணை மறுசீரமைக்கப்படும்?
கடன் மறுசீரமைப்பு செய்யக் கோரிக்கை வைக்கும் வாடிக்கையாளர்களின் விண்ணப்பத்தை, எஸ்பிஐ வங்கி 7 முதல் 10 நாட்களில் பரிசீலனை செய்து அனுமதியளிக்கும்.
கடனை மறுசீரமைக்கச் செயலாக்கக் கட்டணம் உண்டா?
இல்லை. கடனை மறுசீரமைக்கச் செயலாக்கக் கட்டணம் ஏதுமில்லை.


















