தமிழ்நாடு
ஒரு தாயாக இன்னும் நான் என்ன செய்ய? அற்புதம்மாள் வேதனை!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை வகித்து வருகின்றனர். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்ததை அடுத்து இது குறித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம் என்று கூறியதை அடுத்து தமிழக அரசும் இது குறித்த தீர்மானம் ஒன்றை இயற்றி தமிழக கவர்னரிடம் தாக்கல் செய்தது. நீண்ட காலதாமதத்திற்கு பின் கவர்னர் சமீபத்தில் இந்த தீர்மானம் குறித்து முடிவு எடுத்த நிலையில் 7 பேர் விடுதலை குறித்து குடியரசுத் தலைவர் முடிவெடுப்பார் என்று கூறி கை விரித்தார். கவர்னரின் இந்த முடிவு அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கடந்த 25 ஆண்டுகளாக தனது மகன் பேரறிவாளனை விடுதலை செய்ய சட்ட போராட்டம் நடத்திவரும் அவரது தாயார் அற்புதம்மாள் இதுகுறித்து வேதனை தெரிவித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அமைச்சரவை முடிவை அவமதித்து, அரசமைப்பு வழங்கும் மாநில உரிமையையும் கேலி செய்திருக்கிறார் கவர்னர் என்றும் என்ன செய்வது அம்மா என்று பலரும் கொதிப்போடு கேட்டபடி உள்ளனர் என்றும், ஒரு தாயாக இன்னும் நான் என்ன செய்ய வேண்டும்? மத்திய, மாநில அரசு தானே சொல்ல வேண்டும்? செயல்பட வேண்டும்? என்று, தெரிவித்துள்ளார்.
அற்புதம்மாள் அவர்களின் இந்த வேதனை அனைவரையும் பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.




















