இந்தியா
அமேசான் நிறுவனத்திற்கு ரூ.3.06 கோடி அபராதம் : ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு..!
அமேசான் பே நிறுவனத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கி ரூபாய் 3.06 கோடி அபராதம் விதித்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமேசான் நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் நிறுவனங்களில் ஒன்று அமேசான் பே என்பதும் பண பரிவர்த்தனை செயலியான இந்நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி பெரும் தொகையை அபராதம் விதித்துள்ளதாகவும் உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியாகியுள்ளன.
மின்னணு வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான அமேசான் பே நிறுவனம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட டிஜிட்டல் நிதி சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் அமேசான் பே நிறுவனம் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறியதற்காக ரூபாய் 3.06 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி சற்றுமுன் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘ பண பரிவர்த்தனை சார்ந்த விதிமுறைகளை அமேசான் பே பின்பற்றவில்லை என்றும் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் கேஒய்எசி தொடர்பான ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவுகளை அமேசான் பே நிறுவனம் கடைப்பிடிக்கவில்லை என்றும் இந்த விதிமுறைகளை கடைபிடிக்காததற்கு ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என்று காரணம் கேட்டு அமேசான் பே நிறுவனத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நோட்டீஸ்க்கு அமேசான் நிறுவனம் அளித்த பதிலை ஆய்வு செய்த ரிசர்வ் வங்கி அமேசான் பே நிறுவனம் ரிசர்வ் வங்கி விதித்த விதிமுறைகளுக்கு இணங்கவில்லை என்பதை உறுதி செய்ததை அடுத்து அபராதம் விதிக்க முடிவு செய்தது.
இதனை அடுத்து அமேசான் பே நிறுவனத்திற்கு ரூ.3.06 கோடி அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. அமேசான் பே நிறுவனத்தின் விதிமீறல் செயலுக்காக இந்த அபராத உத்தரவு விதிக்கப்பட்டது என்றும், அமேசான் பே செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் அவர்களுடைய பரிவர்த்தனைகளுக்கும் எந்தவித பாதிப்பும் இருக்காது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.