உலகம்
கைது செய்ய வாரண்ட் பிறப்பித்த நீதிபதி.. முன்னாள் பிரதமர் தலைமறைவு..!

முன்னாள் பிரதமரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து அவர் தலைமறைவாகியுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமராக இருந்தவர் இம்ரான்கான் என்பதும் இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் என்பதன் தெரிந்ததே. பாகிஸ்தான் அணிக்கு உலக கோப்பையை பெற்று தந்த இம்ரான்கான் 1996 ஆம் ஆண்டு தனிக்கட்சியை தொடங்கி அரசியலில் குதித்தார் என்பதும் 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அவரது கட்சி ஆட்சியைப் பிடித்ததை அடுத்து அவர் பிரதமர் பதவியை ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பாகிஸ்தானின் விலைவாசி கடுமையாக உயர்ந்து பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து இம்ரான் கான் அரசுக்கு ஆதரவளித்து வந்த கூட்டணி கட்சிகள் திடீரென வாபஸ் பெற்றன. இதனை அடுத்து கடந்த ஆண்டு அவருடைய ஆட்சி கவிழ்ந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமராக இருந்தபோது இம்ரான் கான் பல்வேறு நாடுகளுக்கு வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்த போது அவருக்கு உலக தலைவர்கள் பரிசு பொருட்களை வழங்கியதாகவும் பாகிஸ்தான் சட்ட விதிகளின்படி பிரதமருக்கு அளிக்கப்படும் பரிசு பொருள்கள் அரசு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் அவர் தனக்கு வந்த பரிசுப் பொருட்களை இம்ரான்கான் விற்று விட்டதாகவும் அதன் மூலம் அவர் கோடிக்கணக்கான பணத்தை லாபமாக பெற்றதாகவும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் நீதிமன்றம் அவரை ஆஜராக உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அவர் மூன்று முறை ஆஜராகவில்லை என்பதை அடுத்து அவரை கைது செய்து ஜாமினில் வெளிவர முடியாத வாரன்டை நீதிமன்றம் பிறப்பித்தது.
இதனை அடுத்து உடனடியாக இஸ்லாமாபாத் போலீசார் இம்ரான் கான் வீட்டிற்கு சென்றபோது அவர் அங்கு இல்லை என்றும் அவர் திடீரென தலைமறைவாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து இம்ரான் கானை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து இஸ்லாமாபாத் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறிய போது இம்ரான் கான் தலைமறைவாக உள்ளார் என்றும் அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் அவரை கைது செய்ய விடாமல் கட்சித் தொண்டர்கள் தடுக்கின்றனர் என்றும் ஆனால் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் கூறினார்.