உலகம்
18 ஆண்டுகளாக ஜப்பானில் உணவகம் நடத்தி வந்த இந்தியர் வெளியேற வேண்டிய நிலை

ஜப்பானில் கடந்த 18 ஆண்டுகளாக இந்திய உணவகத்தை நடத்தி வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மனிஷ் குமார், விசா நீட்டிப்பு மறுக்கப்பட்டதால் கடும் சிக்கலில் சிக்கியுள்ளார். இதனால் அவர் நடத்தி வந்த உணவகத்தை மூடும் நிலையும், 30 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த ஜப்பானை விட்டு வெளியேற வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது.
ஜப்பானின் சைதாமா பகுதியில் இந்திய உணவகத்தை நடத்தி வரும் மனிஷ் குமார், சமீபத்தில் டோக்கியோவில் நடைபெற்ற ஒரு போராட்ட நிகழ்ச்சியில் தனது நிலையை உணர்ச்சிபூர்வமாக பகிர்ந்துள்ளார்.
“30 ஆண்டுகள் உழைத்தேன்… இப்போது நாடு திரும்ப சொல்லுகிறார்கள்”
மனிஷ் குமார் கூறுகையில், ஜப்பானின் Immigration Services Agency (ISA) தனது Business Manager Visa-வை நீட்டிக்க மறுத்துவிட்டதாக தெரிவித்தார். 2025 அக்டோபரில் அமலுக்கு வந்த கடுமையான புதிய விதிமுறைகளே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.
“இரண்டு வாரங்களுக்கு முன்பு, ‘உங்கள் நாட்டிற்கு திரும்பிச் செல்லுங்கள்’ என்று ISA அதிகாரிகள் கூறினர். 30 ஆண்டுகளாக கடுமையாக உழைத்தேன். சிரமப்பட்டு வீடு வாங்கினேன். ஜப்பானிய மொழி நன்றாக தெரியாவிட்டாலும் என்னால் முடிந்தவரை முயன்றேன். நான் எந்த குற்றமும் செய்யவில்லை. இப்போது திடீரென வெளியேற சொல்லுவது மனிதநேயமா?” என்று அவர் வேதனையுடன் கூறினார்.
மேலும், “என் குழந்தைகள் ஜப்பானில்தான் பிறந்தவர்கள். அவர்களுக்கு ஜப்பானிய மொழி மட்டுமே தெரியும். என் மனைவியும் மகளும் அழுதுகொண்டிருக்கிறார்கள்,” என்றும் தெரிவித்தார்.
புதிய விசா விதிமுறைகள் பின்னணி
ஜப்பானில் வெளிநாட்டு தொழில்முனைவோருக்கான ‘Business Manager Visa’ விதிமுறைகள் சமீபத்தில் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்த விசா முறையை சிலர் தவறாக பயன்படுத்தி நீண்டகால குடியிருப்பு உரிமை பெற முயன்றதாக கூறப்படுவதால், புதிய கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
ஆனால் இந்த நடவடிக்கை, பல ஆண்டுகளாக நேர்மையாக தொழில் செய்து வந்த சிறு வணிகர்களையும் பாதிக்கிறது என்று விமர்சகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
96% வீழ்ச்சியடைந்த விசா விண்ணப்பங்கள்
அதிகாரப்பூர்வ தகவல்களின் படி, 2025 அக்டோபரில் புதிய விதிகள் அமலுக்கு வந்த பிறகு, Business Manager Visa விண்ணப்பங்கள் 96% வரை சரிந்துள்ளன. மாதத்திற்கு சுமார் 1,700 விண்ணப்பங்கள் வந்த நிலையில், தற்போது அது வெறும் 70 ஆக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனிஷ் குமார் விவகாரம், ஜப்பானில் வாழும் வெளிநாட்டு தொழில்முனைவோரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நீண்டகாலமாக அங்கு வசித்து வரும் இந்தியர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை சிக்னலாக பார்க்கப்படுகிறது.






















