தமிழ்நாடு
தினகரனின் அமமுக கட்சியில் இணைந்தார் பாமகவில் இருந்து விலகிய நடிகர் ரஞ்சித்!

பாமக மக்களவை தேர்தலுக்காக அதிமுக, பாஜக கூட்டணியில் இணைந்ததையடுத்து அந்த கட்சியில் இருந்து விலகினார் அதன் மாநில துணைத்தலைவர் நடிகர் ரஞ்சித். இந்நிலையில் ரஞ்சித் தன்னை டிடிவி தினகரனின் அமமுக கட்சியில் இணைத்துக்கொண்டார்.
டிடிவி தினகரனை சந்தித்து அமமுகவில் இணைந்த ரஞ்சித் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தன்னம்பிக்கை, ஆளுமை, தைரியம் உள்ள ஒரே தலைவர் தினகரன்தான். ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு எல்லோராலும் விரும்பப்படுபவர் தினகரன். வாக்கு வாழ்க்கையையே மாற்றும், அந்த வாக்குகள் அமமுகவுக்கு கிடைக்க கடுமையாக உழைப்பேன். கூட்டணி, பேரம் பேசுதல் எந்த விதத்திலும் கொள்கையை விட்டுக்கொடுக்காதவர் தினகரன் என்றார்.
இதனையடுத்து பேசிய டிடிவி தினகரன், ஜாதி மதமற்ற தலைவர் என்ற ரஞ்சித்தின் கூற்றை உண்மையாக்கும் விதத்தில் நடந்து கொண்டிருக்கிறோம். புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகதான் போட்டியிடுகிறது. திமுக, காங்கிரஸ் கூட்டணியை பலமான கூட்டணியாக மக்கள் பார்க்கவில்லை. ஈழப்பிரச்சனை, மீத்தேன் பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்தது திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான். பாமக, தேமுதிக இரண்டு கட்சிகளுமே ஜெயலலிதாவுக்கு எதிராக பேசிய கட்சிகள்தான். அவர்களுடன் அமமுக எப்படி கூட்டணி வைக்க முடியும்? என்றார்.





















