இந்தியா
எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் மாதங்களில் உலகளவில் கடுமையான வானிலை மாற்றங்கள்

வேகமாக தீவிரமடைந்து வரும் எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் மாதங்களில் உலகளவில் கடுமையான வானிலை மாற்றங்கள் மற்றும் தீவிர காலநிலை பாதிப்புகள் ஏற்படக்கூடும் என உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் வானிலை தகவலகம் வெளியிட்ட தகவலின்படி, இந்த காலநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதும் வெப்ப அலைகள், கடுமையான வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் காட்டுத்தீ தீவிரமடைந்து வருவதுடன், தெற்காசியாவில் பருவமழை பேரழிவை ஏற்படுத்தி வரும் சூழலிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உலகளாவிய வெப்பநிலை கணிசமாக உயரும்.ஆப்பிரிக்கா, தெற்கு ஐரோப்பா, இந்திய துணைக்கண்டம், கிழக்கு ஆசியா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் கடுமையான வெப்பம் பதிவாகக்கூடும்.
அத்துடன்,இந்த ஆண்டின் பிற்பகுதியில் எல் நினோ உச்சத்தை அடையும் போது, அது புதிய சாதனையை எட்டக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில், “எல் நினோ நமது வாசற்படியில் மட்டும் இல்லை, அது வீட்டிற்குள் நுழைந்து வெப்பத்தை அதிகரிக்கத் ஆரம்பித்துவிட்டது என்று ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அட்டனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.
இது வெறும் ஆரம்பம் மட்டுமே. ஏற்கனவே தகித்துக் கொண்டிருக்கும் ஒரு கிரகத்திற்கு எல் நினோ மேலும் எரியூட்டுகிறது. எனவே காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அனைத்து நாடுகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.








