உலகம்
ஓமன் கடலில் பதற்றம்: இரானிய கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது – பதிலடி எச்சரிக்கை!

வளைகுடா பகுதியில் கடற்படை முற்றுகையின் ஒரு பகுதியாக, இரானிய கொடி ஏந்திய சரக்குக் கப்பலை அமெரிக்க கடற்படை இடைமறித்து கைப்பற்றிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தனது சமூக வலைதளமான ட்ரூத் சோஷியலில் பதிவிட்ட டொனால்ட் டிரம்ப், கப்பலை நிறுத்துமாறு பலமுறை எச்சரித்தும் அதை பின்பற்றாததால், “டௌஸ்கா” எனப்படும் கப்பலை அமெரிக்க கடற்படை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக தெரிவித்துள்ளார்.
இதற்கு கடுமையாக எதிர்வினை தெரிவித்துள்ள இரான், இந்த நடவடிக்கை போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாகவும், இது ஒரு “ஆயுதமேந்திய கடற்கொள்ளை” செயலாகும் என்றும் குற்றம்சாட்டியுள்ளது. இதற்கான பதிலடி விரைவில் வழங்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
இரான் அரசு ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, நாட்டின் உயர்மட்ட ராணுவ தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் கதம் அல்-அன்பியா கூறுகையில், ஓமன் கடலில் பயணம் செய்த இரானிய வணிகக் கப்பல் மீது அமெரிக்க படைகள் துப்பாக்கிச்சூடு நடத்தி, அதன் வழிகாட்டும் அமைப்பை செயலிழக்கச் செய்ததாகவும், பின்னர் கப்பலில் ஏறி கட்டுப்பாட்டை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், “இரான் இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்புப் படைகள், அமெரிக்க கடற்படையின் இந்த தாக்குதலுக்கு விரைவில் தக்க பதிலடி கொடுக்கும்” என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் மேற்கு ஆசியாவில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்














