இந்தியா
விண்ணைத் தாண்டி வருவாரா? சுனிதா வில்லியம்ஸை வரவேற்க உலகமே தயாராகிக் கொண்டிருக்கிறதா?
விண்வெளியில் வெறும் 8 நாட்கள் மட்டுமே தங்கும் திட்டத்துடன் புறப்பட்டுச் சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோருக்கு 9 மாதங்களுக்குப் பின் பூமிக்கு திரும்பும் பயணம் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். தற்போதிருக்கும் விண்வெளி வீரர்களில் ஸ்பேஸ் வாக் எனப்படும் விண்வெளி நடையில் அதிக அனுபவம் கொண்டவராக இரண்டாவது இடத்தில் சுனிதா வில்லியம்ஸ் (9 முறை 62 மணி 6 நிமிடம் ) இருக்கிறார்.. “விண்வெளியில் இருந்து நாம் வாழும் இந்த பூமியை பார்க்கும் வாய்ப்பைப் பெற்றதற்காக நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று கருதுகிறேன்” – இது சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்த வார்த்தைகள். இவருக்கு உலகெங்கிலும் வாழ்த்துகளும், வரவேற்புகளும் குவிந்து வருகிறது.
சுனிதா அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவர் என்றாலும் குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தின் ஜுலாசன் கிராமம்தான் சுனிதாவின் தந்தை தீபக் பாண்ட்யா பிறந்து வளர்ந்த இடம். மருத்துவரான தீபக் அமெரிக்காவிற்கு தொழில் செய்ய சென்ற போது ஸ்லோவேனியாவைச் சேர்ந்த உர்சுலின் போன்னி என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு அமெரிக்காவின் ஓஹாயோ மாகாணத்தில் 1965-ஆம் ஆண்டில் சுனிதா வில்லியம்ஸ் பிறந்தார். சுனிதாவின் தந்தை ஒரு இந்து, அவரது தாயார் ஒரு கத்தோலிக்கர் என்பதால், அவரது வீட்டில் அனைத்து மதங்களையும் மதிக்க கற்பிக்கப்பட்டது. சுனிதாவின் தந்தை தீபக், ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயத்திற்கு பகவத் கீதையை தன்னுடன் எடுத்துச் செல்வார்.
சுனிதாவுக்கு நீச்சல் மிகவும் பிடிக்கும். நீச்சல் போட்டிகளில் போட்டியிட்டு பல பதக்கங்களை வென்ற சுனிதா ஒரு நீச்சல் வீராங்கனையாக வருவார் என்று அனைவரும் நினைக்க அவர் மருத்துவக் கல்வியில் குறிப்பாக விலங்கு மருத்துவராக விரும்பினார். சுனிதா ஒரு கால்நடை மருத்துவராக மாற விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவரால் அவர் விரும்பிய கல்லூரியில் சேர முடியவில்லை. இதன் விளைவாக, அவர் தனது சகோதரர் ஆலோசனைபடி அமெரிக்க கடற்படை அகாடமியில் 1983ல் சேர்ந்தார். இங்கு பயிற்சி முடிந்த பிறகு அவர், 1989 ஆம் ஆண்டு கடற்படையில் பயிற்சி விமானியாக இணைந்தார். 30 வகையான வானூர்திகளை இயக்கியதோடு, 2,770 மணி நேரம் வான்வெளியில் பறந்து அனுபவம் பெற்றுள்ளார் சுனிதா வில்லியம்ஸ். 1993 ஆம் ஆண்டில், அவர் மேரிலாந்தில் உள்ள கடற்படை டெஸ்ட் பைலட் பள்ளியில் பயின்ற போது அவர் ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில் நிலவுக்கு சென்றிருந்த ஜான் யங்குடன் சேர்ந்து பணியாற்றினார்.. சுனிதா, அவரால் ஈர்க்கப்பட்டு நாசாவில் சேர விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 1995 ஆம் ஆண்டில் புளோரிடா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பொறியியல் மேலாண்மையில் முதுகலை பட்டம் பெற்றார். 1997 ஆம் ஆண்டில், அவர் மீண்டும் நாசாவுக்கு விண்ணப்பித்தார். இந்த முயற்சியில் நாசா அவரது விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு. அவர் ஒரு பயிற்சி விண்வெளி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடற்படை அகாடமியில் இருந்தபோது, சுனிதாவுக்கு மைக்கேல் வில்லியம்ஸ் என்ற நண்பர் இருந்தார். அவர்களது நட்பு காதலாக மாறியது, 1987ம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
2006ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி முதன்முறையாக டிஸ்கவரி விண்கலத்தின் மூலம் விண்வெளிக்கு பயணப்பட்டார். Expedition 14, Expedition 15 விண்கலங்களில் பணிகளை முடித்துக் கொண்டு 2007ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி பூமிக்கு திரும்பினார். 2012ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி இரண்டாவது விண்வெளிப் பயணத்தை ரஷ்யாவின் சோயுஸ் டிஎம்ஏ-05 எம் விண்கலத்தின் மூலம் மேற்கொண்டு அதே ஆண்டில் நவம்பர் 19ம் தேதி பூமிக்கு திரும்பினார்.
2015ம் ஆண்டில் வணிகரீதியான விண்வெளி பயணங்களுக்கான முதல் விண்வெளி வீரராக சுனிதா வில்லியம்ஸ் அறிவிக்கப்பட்டார். 2024ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் செய்தார். விண்கலத்தின் த்ரஸ்டர்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இக்குழு இன்றி விண்கலம் பூமிக்கு திரும்பியது. இதனால் வெறும் 8 நாட்கள் மட்டுமே திட்டமிடப்பட்ட இந்த பயணம், 9 மாதங்களைக் கடந்திருக்கிறது. 59 வயதான சுனிதா வில்லியம்ஸ் எதிர்பாராத விதமாக கூடுதல் நாட்கள் தங்க நேர்ந்த போதிலும், அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக நாசா கூறியுள்ளது.
இவ்வளவு நாட்களாக விண்வெளியில் 150க்கும் மேற்பட்ட ஆய்வுப் பணிகளில் 900 மணிகளுக்கு மேலாக ஈடுபட்டிருந்தார். அவற்றில் விண்வெளியில் விவசாயம் தொடர்பான ஆராய்ச்சி, ஆவி பறக்கும் உணவிலிருந்தும் வியர்வையிலிருந்தும் வெளியாகும் நீர் விண்வெளி நிலையத்தின் காற்றில் கலந்திருப்பதை பிரிக்கும் கருவியை பரிசோதனை செய்வதிலும், பதப்டுத்தப்பட்ட உணவுகளில் உள்ள ஈஸ்ட் பாக்டீரியா குறித்த ஆரய்ச்சியிலும் ஈடுபட்டார். விண்வெளிப்பயணத்தில் ஈடுபடுவோர்க்கு வழக்கமாக ஏற்படக்கூடிய தசை அழற்சி அதிகரிப்பு, எலும்பு அடர்த்தி குறைதல், குடல் பாக்டீரியா மாற்றங்கள் போன்ற பாதிப்புக்கள் சுனிதாவுக்கும் ஏற்படக்கூடும் என்பதால் விண்வெளி பயணம் முடிந்து திரும்பிய பிறகும் ஆறு மாதங்கள் வரை தொடர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுவார் என நாசா தெரிவித்துள்ளது.
தற்போது விண்வெளி நிலையத்திலிருந்து உலகத்துக்குத் திரும்பும் பயணத்தை தொடங்கியுள்ள சுனிதா இந்திய நேரப்படி நாளை அதிகாலை 3.30 மணியளவில் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் வருகையை இந்த உலகமே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
விண்ணைத் தாண்டி வருகை தரும் சுனிதாவை நாமும் வரவேற்க தயாராவோம்.













