தமிழ்நாடு
சசிகலாவை சந்திக்க டிடிவி தினகரனுக்கு அனுமதி மறுப்பு!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளார் சசிகலா. இவரை அவரது குடும்பத்தினர், அரசியல் புள்ளிகள் என பலரும் அடிக்கடி சென்று சந்தித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அமமுக பொதுச்செயலாளரும், சசிகலாவின் அக்கா மகனுமான டிடிவி தினகரன் அடிக்கடி அவரை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் சசிகலாவை சந்திக்க இன்று சென்ற டிடிவி தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சிறை நிர்வாக விதிமுறைகளின்படி சசிகலாவை 15 நாட்களுக்கு ஒருமுறைதான் சந்திக்க முடியும். இதனையடுத்து 15 நாட்களுக்கு முன்னர் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சசிகலாவை சந்தித்தார். இந்த நிலையில் கடந்த 18-ஆம் தேதி சசிகலாவுக்கு பிறந்தநாள். எனவே அவரை சந்திக்க திட்டமிட்ட தினகரனால் சிறை விதிகளால் சந்திக்க முடியவில்லை.
எனவே இன்று சிறையில் இருக்கும் சசிகலாவை மதியம் 12 மணிக்கு சந்திக்க அனுமதி கேட்டிருந்தார் தினகரன். ஆனால் நேற்று சசிகலாவின் உறவினர் ஒருவர் பத்திரிக்கை வைப்பதற்காக அவரை சந்திக்க சென்றதால் சசிகலாவை இன்று சந்திக்க முடியாது என்று சிறை நிர்வாகத்திடம் இருந்து தினகரனுக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலையடுத்து சசிகலாவை சந்திக்க கிருஷ்ணகிரி வரை சென்ற டிடிவி தினகரன் அங்கிருந்து மீண்டும் சென்னைக்கு திரும்பினார்.


















