இந்தியா
பிரதமர் நரேந்திர மோடியின் 100வது மன் கி பாத் நிகழ்ச்சி: வாழ்த்து கூறிய பில்கேட்ஸ்!
![Polish_20230429_184849613 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/04/Polish_20230429_184849613.jpg)
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக அக்டோபர் 3 ஆம் தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதன்பிறகு, மாதந்தோறும் வரும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலமாக, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
100வது மன் கி பாத்
பிரதமர் நரேந்திர மோடியின் 100வது மன் கி பாத் நிகழ்ச்சி நாளை ஏப்ரல் 30 ஆம் தேதி ஒலிபரப்பு செய்யப்பட இருக்கிறது. இதனை வெற்றியடையச் செய்யும் எண்ணத்தில், பா.ஜ.க. முழு அளவில் தயாராகி வருகிறது. இந்நிகழ்ச்சியை இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் ஒலிபரப்புவதற்கு பா.ஜ.க. தயாராகி வருகிறது.
பில்கேட்ஸ் பாராட்டு
மைக்ரோசாப்ட் நிறுவனர் மற்றும் உலக கோடீசுவரர்களில் ஒருவரான பில்கேட்ஸ், பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். பிரதமர் மோடியின் தலைமைப் பண்பிற்கு அடிக்கடி புகழாரம் தெரிவித்து வரும் இவர், மன் கி பாத் நிகழ்ச்சியானது சுகாதாரம், துப்புரவு, பெண்களின் பொருளாதாரத்திற்கு அதிகாரமளித்தல் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளுடன் தொடர்புடைய பிற செயல்கள் ஆகியவற்றில் சமூகத்தினர் தலைமையிலான நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு ஊக்குவித்து வருகிறது. 100வது மன் கி பாத் நிகழ்ச்சிக்காக நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள் என அவர் தெரிவித்து உள்ளார்.
மற்றொரு வரலாற்று மைல்கல்லாக, இந்த 100வது மன் கி பாத் நிகழ்ச்சியானது ஐ.நா. சபையின் தலைமைச் செயலகத்தில் நேரலையாக ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது.