இந்தியா
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, பாஜகவிலிருந்து விலகி 5 பக்க ராஜினாமா கடிதம் அளித்தார், அதிமுக கூட்டணி, தலைமை முடிவுகள் மீது அதிருப்தி, புதிய கட்சி திட்டம் பேசப்படுகிறது
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அந்த கட்சியில் இருந்து விலகுவதாக 5 பக்கங்கள் கொண்ட ராஜினாமா கடிதத்தை பாஜக தேசிய தலைவரிடம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று டெல்லி சென்ற அண்ணாமலை பாஜக தேசிய தலைவர்களை சந்தித்தபின் இந்த ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். நீண்ட காலமாகவே அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்து வந்தது.
கர்நாடகாவில் நேர்மையான ஐபிஎஸ் அதிகாரி என பெயர் வாங்கிய அண்ணாமலை, கடந்த 2019ஆம் ஆண்டு தனது பணியை ராஜினாமா செய்தார். 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாஜகவில் அவர் இணைந்தார். 2021 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்ட பாஜக, 4 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், அப்போதைய தலைவர் எல்.முருகனுக்கு பாஜக மேலிடம் மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கியது. இதனால் 37 வயதான அண்ணாமலைக்கு மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.
2023ல் ‘என் மண் என் மக்கள்’ என்ற நடைபயணத்தை தொடங்கிய அண்ணாமலை பாஜகவை வளர்க்கும் முயற்சியில் மும்முரம் காட்டினார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தனித்து போட்டியிடச் செய்து 11 புள்ளி 24 சதவீத வாக்குகளை பெற்று தேசியத் தலைமையின் கவனத்தை ஈர்த்தார். இதற்கு பெரும் வெகுமதியை அண்ணாமலை பெறுவார் எனக் கூறப்பட்ட நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து அவர் கீழ் இறக்கப்பட்டார். எடப்பாடி பழனிச்சாமியின் அழுத்தங்களுக்கு டெல்லி மேலிடம் இடம் கொடுத்த்து அண்ணாமலைக்க அதிருப்தியை கொடுத்து வந்தாலும் கட்சிப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.
அதிமுகவுடனான கசப்பான அனுபவங்களை கலையவே அண்ணாமலையை கீழ் இறக்கி நயினார் நாகேந்திரனை மாநிலத் தலைவராக பாஜக நியமித்ததாக தகவல் பரவியது. மேலும் ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் அண்ணாமலைக்கு பங்கு இருப்பதாகவும் கூறப்பட்டது. கட்சிக்குள்ளேயே சிலரின் வளர்ச்சியை கட்டுப்படுத்த அண்ணாமலை முயற்சி செய்ததாக புகார்களும் எழுந்தன. ஆனாலும் அண்ணாமலைக்கு என்று தனியாக சமூக வலைதளங்களில் பின்தொடர்பவர்களின் கூட்டம் மிகவும் உயிர்ப்புடன் இயங்கி வருகிறது.
அதிமுகவுடனான கூட்டணிக்கு தொடக்கம் முதலே எதிர்ப்புக் கொடி தூக்கி வந்த நிலையில், தனது பேச்சுக்கு கட்சித் தலைமை இசைவு கொடுக்காதது அண்ணாமலையை கடும் அதிருப்திக்குள்ளாக்கியதாகவும், இதன் காரணமாக புதிய கட்சி தொடங்க அவர் திட்டமிட்டதாகவும் தகவல் பரவியது. புதிய கட்சி தொடங்கினாலும் பாஜகவுடனான தனது தொடர்பை துண்டித்துக் கொள்ளாமல் பெரும்பாலும் இணைந்தே செயல்படுவார் என்று கூறப்படுகிறது.
விஜயெல்லாம் தமிழ்நாட்டு முதல்வராக இருக்கும் போது நம்மால் முடியாதா என்ற முதல்வர் கனவோடு புதிய கட்சி தொடங்க இருக்கிறார் அண்ணாமலை என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.













