ஆரோக்கியம்
திருச்சியில் உயிரிழந்த செவிலிய மாணவி தரமற்ற “டெக்சாமெதாசோன்“ மருந்தால் உயிரிழந்தாரா? – நிபுணர் குழு ஆய்வறிக்கை

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு செலுத்தப்பட்ட “டெக்சாமெதாசோன்“ ஊசி மருந்தால் செவிலியர் கல்லூரி மாணவி உயிரிழந்ததாகவும் கடுமையான பக்க விளைவுகள் ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது.
இது குறித்து ஆய்வு செய்த நிபுணர் குழு அதன் உற்பத்தி தரத்தை பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமாக கடந்த ஏப்ரலில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மட்டும் 4000 டெக்சாமெதாசோன் குப்பிகள் வழங்கப்பட்டன. அதில் 3500க்கும் மேற்பட்ட மருந்துகள் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்பட்டு விட்ட நிலையில் சுமார் 300 மருந்துகள் கையிருப்பில் உள்ளன. ஒவ்வாமை, அழற்சி போன்ற பாதிப்புகளுக்கு அறுவை சிகிச்சையின் போதும் அதற்கு பின்னரும் “டெக்சாமெதாசோன்“ மருந்து வழங்கப்படுகிறது. ஆனால் திருச்சி மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது குறிப்பிட்ட உற்பத்தி தொகுதி (பேட்ச்) மருந்து செலுத்தப்பட்ட மூன்று நோயாளிகளுக்கு கடுமையான இதய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக டேக்கி அரித்மியா எனப்படும் அதிவேக இதயத்துடிப்பு, கார்டியோ மயோபதி எனப்படும் இதயத்தசை தளர்வு கடுமையான இடது வென்ட்ரிகுலர் செயலிழப்பு கார்டியோஜெனிக் ஷாக் எனப்படும் இதயச் செயலிழப்பால் ஏற்படும் அதிர்ச்சி நிலை ஆகியவை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளன.
கடந்த மே 22ம் தேதி மூக்கு சதை சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்ட 20 வயதான மூன்றாம் ஆண்டு செவிலியர் கல்லூரி மாணவிக்கும் இந்த டெக்சாமெதாசோன் மருந்து செலுத்தப்பட்டிருக்கிறது. அதன்பிறகே இதய பாதிப்புக்கள் ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஆய்வு செய்ய மக்கள் நல்வாழ்வுத் துறை ஒரு சிறப்பு நிபுணர் குழுவை அமைத்தது. இந்த குழுவினர் ஆய்வு செய்து அரசிடம் அளித்த ஆய்வறிக்கையில் “டெக்சாமெதாசோன்“ மருந்து அந்த பெண்ணின் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த மருந்தின் தரத்தை ஆய்வு செய்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனிடையே குறிப்பிட்ட உற்பத்தி தொகுப்பைச் சேர்ந்த (கிஎச்ஐ-60004) டெக்சாமெதாசோன் 8 எம்.ஜி மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது என சுகாதாரத் துறையினர் உத்தரவிட்டு அவற்றை அரசு மருத்துவமனைகளில் இருந்து திரும்பப் பெற்றுள்ளனர். அவை கிண்டியில் உள்ள கிங் நோய்த் தடுப்பு மற்றம் ஆரய்ச்சி நிலையத்துக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன.
முன்னதாக கடந்த மே 29ம் தேதி திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் எஸ்.குமரவேல் மருத்துவக் கல்வி மற்றம் ஆரய்ச்சி இயக்குநரகத்துக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் “டெக்சாமெதாசோன்“ மருந்தின் கடுமையான பக்க விளைவுகளைக் குறித்துக் குறிப்பிட்டிருந்ததுடன் உடனடியாக மருந்துப் பகுப்பாய்வு செய்து உரிய தடுப்ப நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இது குறித்து தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் உயர் அதிகாரி ஒருவர் “மாநிலத்திலுள்ள வேறு எந்த மருத்துவமனையிலும் இதுபோன்ற பக்க விளைவு புகார்கள் இதுவரை வரவில்லை. எனினும் திருச்சியில் புகார் எழுந்த உடனேயே உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு குறிப்பிட்ட தொகுதி மருந்துகளை பயன்படுத்த தடை விதித்துள்ளோம். அதன் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப் பட்டுள்ளன. அந்த அறிக்கை வந்த பிறகே இந்த சந்தேகங்கள் உண்மையா என்பது தெரியவரும்“ என்றார்.












