பர்சனல் ஃபினான்ஸ்
உங்கள் பிஎப் கணக்கில் சேமிக்கும் பணத்திற்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?

ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் பிஎப் (PF) தொகை ஓய்வுக்குப் பிறகு எவ்வளவு ஓய்வூதியமாக கிடைக்கும் என்ற சந்தேகம் பல ஊழியர்களுக்கும் உள்ளது. பெரும்பாலானோர் பிஎப் கணக்கில் சேமிக்கப்பட்ட முழுத் தொகையும் மாதந்தோறும் ஓய்வூதியமாக கிடைக்கும் என நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் பிஎப் மற்றும் இபிஎஸ் (EPS) என்பது இரண்டு தனித்தனி திட்டங்கள் என்பதையும், இரண்டின் பயன்களும் விதிமுறைகளும் மாறுபடும் என்பதையும் பலர் அறிந்திருக்கவில்லை.
பிஎப் எனப்படும் இபிஎப் (EPF) என்பது நீண்டகால சேமிப்பு திட்டமாகும். இதில் ஊழியரின் சம்பளத்தில் இருந்து 12 சதவீதம் மற்றும் நிறுவனத்தின் பங்களிப்பில் ஒரு பகுதி சேர்க்கப்பட்டு சேமிக்கப்படுகிறது. இந்தத் தொகைக்கு ஆண்டுதோறும் வட்டி கிடைக்கிறது. வேலை நிறைவு அல்லது ஓய்வின் போது இந்தச் சேமிப்புத் தொகையை ஒரே முறையாக முழுவதும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இந்தப் பிஎப் தொகை மாத ஓய்வூதியமாக வழங்கப்படாது.
இபிஎஸ் (Employee Pension Scheme) என்பது ஓய்வுக்குப் பிறகு மாதந்தோறும் நிரந்தர வருமானம் வழங்குவதற்கான ஓய்வூதியத் திட்டமாகும். இதில் ஒரே முறையாக தொகை வழங்கப்படாது. ஊழியரின் நிறுவன பங்களிப்பில் இருந்து 8.33 சதவீதம் இபிஎஸ் நிதிக்குச் செல்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியம், நீங்கள் செலுத்திய தொகையை அடிப்படையாகக் கொண்டு அல்ல, ஒரு நிரந்தர கணக்கீட்டு முறையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.
இபிஎஸ் ஓய்வூதியம் கணக்கிடப்படுவதற்கான அதிகபட்ச சம்பள வரம்பு ரூ.15,000 ஆகும். உங்கள் சம்பளம் இதைவிட அதிகமாக இருந்தாலும், ஓய்வூதியம் ரூ.15,000 அடிப்படையிலேயே கணக்கிடப்படும். ஓய்வூதியத்தின் அளவு, ஓய்வூதியத்திற்குரிய சம்பளம் மற்றும் இபிஎஸ்-க்கு நீங்கள் செலுத்திய மொத்த சேவை ஆண்டுகளைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது.
இபிஎஸ் ஓய்வூதியம் கணக்கிடப்படும் சூத்திரம், ஓய்வூதியத்திற்குரிய சம்பளத்தை சேவை ஆண்டுகளுடன் பெருக்கி 70-ஆல் வகுப்பதாகும். உதாரணமாக, ஓய்வூதியத்திற்குரிய சம்பளம் ரூ.15,000 ஆகவும், சேவை காலம் 35 ஆண்டுகளாகவும் இருந்தால், மாத ஓய்வூதியம் ரூ.7,500 ஆகும். இதனால் பிஎப் கணக்கில் எவ்வளவு பணம் சேமிக்கப்பட்டிருந்தாலும், அது மாத ஓய்வூதியத்தை அதிகரிக்காது என்பது தெளிவாகிறது.
இபிஎஸ் திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சம் குடும்ப ஓய்வூதியமாகும். ஊழியர் மறைந்தால், அவரது மனைவிக்கு ஓய்வூதியத்தின் 50 சதவீதம் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். இரண்டு குழந்தைகளுக்கு தலா 25 சதவீதம் வழங்கப்படும். குழந்தைகள் 25 வயது வரை இந்தப் பயனை பெறலாம். அரசு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.1,000 என நிர்ணயித்துள்ளது.
பொதுவாக 58 வயதுக்குப் பிறகே முழு ஓய்வூதியம் வழங்கப்படும். ஆனால் 50 வயதுக்குப் பிறகு முன்கூட்டியே ஓய்வூதியம் பெற விரும்பினால், ஒவ்வொரு ஆண்டிற்கும் 4 சதவீதம் குறைப்பு செய்யப்படும். அதேபோல் 58 வயதிற்குப் பிறகு ஓய்வூதியத்தை தள்ளிப் போனால், ஒவ்வொரு ஆண்டிற்கும் 4 சதவீதம் அதிகரிப்பு கிடைக்கும்.
இதனால், பிஎப் மற்றும் இபிஎஸ் மட்டும் ஓய்வுக்குப் பிறகான முழுமையான வருமானத்திற்கு போதுமானவை அல்ல என்பது தெளிவாகிறது. இவை அடிப்படை பாதுகாப்பாக மட்டுமே பயன்படும். ஓய்வுக்குப் பிறகும் வாழ்க்கைத் தரத்தை பாதுகாக்க, பிஎப்-யுடன் சேர்த்து என்.பி.எஸ்., எஸ்ஐபி மற்றும் பிற நீண்டகால முதலீடுகளை ஆரம்பத்திலேயே தொடங்குவது அவசியமாகும். வேலைக்காலத்திலேயே ஓய்வுக்கான திட்டமிடல் செய்தால்தான், எதிர்காலம் நிம்மதியானதாக அமையும்.










