இந்தியா
கவுதம் கம்பீருக்கு பிடிவாரண்ட்: டெல்லி நீதிமன்றம் அதிரடி!

சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீருக்கு டெல்லி நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
டெல்லியில் காசியாபாத் பகுதியில் கடந்த 2011-ஆம் ஆண்டு குடியிருப்பு ஒன்றில் 17 வீடுகளை வாங்க 17 பேர் முன்பணமாக தலா 1.98 கோடி ரூபாயை செலுத்தியுள்ளனர். ஆனால் வீடுகள் கட்டும் பணி இன்னமும் தொடங்கப்படவில்லை. இதனையடுத்து இதில் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தின் இயக்குநராகவும், விளம்பர தூதுவராகவும் உள்ள கவுதம் கம்பீர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட 17 பேரும் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதனை விசாரித்த நீதிமன்றம் கவுதம் கம்பீரை நேரில் ஆஜராகுமாறு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகவில்லை. இறுதியாக அவர் நேற்று, புதன் கிழமை ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் கவுதம் கம்பீர் ஆஜராகவில்லை.
இதனையடுத்து கவுதம் கம்பீருக்கு எதிராக பத்தாயிரம் ரூபாய் தொகையில் பிணையுடன் வெளிவரக் கூடிய வாரண்ட் பிறப்பித்தது டெல்லி நீதிமன்றம். இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை ஜனவரி 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



















