தமிழ்நாடு
பெங்களூரு போல் நெரிசலான நகரமோ, டெல்லி போல் மாசுபட்ட மாநிலமோ ஆக விரும்பவில்லை: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

தமிழ்நாடு, பெங்களூரு போன்று அளவுக்கு மீறிய நெரிசலுடனும், டெல்லி போன்று கடும் காற்று மாசுபாட்டுடனும் கூடிய மாநிலமாக மாறக்கூடாது என்பதே அரசின் உறுதியான நோக்கம் என்று தொழில் துறை அமைச்சர் டாக்டர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.
NDTV நடத்திய தமிழ்நாடு மாநாட்டில் (NDTV Tamil Nadu Conclave) பேசிய அவர், “மொழி அரசியல் காரணமாக தமிழ்நாட்டில் முதலீடுகள் பாதிக்கப்படுகின்றன” என்ற குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்தார்.
தமிழ்நாடு ஏற்கனவே ஒரு பன்முக கலாச்சார (Cosmopolitan) தொழில் மையமாக உருவெடுத்துள்ளதாக கூறிய அமைச்சர்,
இந்தியாவில் மிகப்பெரிய ஜெர்மன், ஜப்பான், தைவான் தொழில் சமூகங்கள் தமிழ்நாட்டில் உள்ளதாகவும், தற்போது வியட்நாம் நிறுவனங்களும் அதிகளவில் முதலீடு செய்து வருவதாகவும் குறிப்பிட்டார். இதுவே தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்ற மாநிலம் என்பதற்கான சான்று என அவர் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாடு இந்தி பேசும் இந்தியர்களுக்கும், நாட்டின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் வரும் முதலீட்டாளர்களுக்கும் திறந்த மனதுடன் வரவேற்பு அளிக்கிறது என்றும், ஆனால் எந்த மொழியும் கட்டாயமாக திணிக்கப்படுவதை கடுமையாக எதிர்க்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
“தமிழ் மொழியை பாதுகாப்பது ஒரு அரசியல் விஷயம் அல்ல; அது ஒரு நாகரிகப் பொறுப்பு (Civilisational Duty)” என்று கூறிய அமைச்சர், முதலீடுகள் மொழி அரசியலால் வருவதில்லை என்றும் வலியுறுத்தினார்.
மாறாக, உள்கட்டமைப்பு வசதிகள், திறமையான மனித வளம், நல்ல நிர்வாகம், தொழில் செய்ய எளிமை (Ease of Doing Business) போன்ற காரணங்களே முதலீட்டாளர்களை ஈர்க்கின்றன என்றார்.
தமிழ்நாடு வளர்ச்சியை நோக்கி செல்லும் போது, கட்டுப்பாடற்ற நகரமயமாக்கல், போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற பிரச்சினைகளை தவிர்த்து, நிலைத்த வளர்ச்சி (Sustainable Development) நோக்கில் நகரங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதே அரசின் இலக்கு என்றும் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.
இந்த கருத்துகள், மொழி, முதலீடு மற்றும் வளர்ச்சி குறித்து தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை தெளிவாக வெளிப்படுத்துகின்றன.


















