தமிழ்நாடு
ஜெயலலிதா எனக்கு அமைச்சர் பதவி தருவதாக சொன்னார்: கருணாஸ் அதிரடி!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நடிகர் கருணாஸுக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
தனது தொகுதியில் நடைபெறும் குடிமராமத்து பணிகளில் அரசியல் தலையீடுகள் இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவை அவரது அலுவலகத்தில் சந்தித்து புகார் அளித்தார் கருணாஸ். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் மணிகண்டன் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த கருணாஸ், மணிகண்டன் குறித்து முதல்முதலாக வெளிப்படையாக புகார் தெரிவித்தது நான்தான். அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. என்னால்தான் அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார்கள் என்று கூறுவதை ஏற்க முடியாது. அவரை நீக்கியதற்கான காரணம் ஏற்கனவே வெளிவந்துவிட்டது. அவர் நீக்கப்பட்டதற்கு நானும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றார்.
மேலும் தொடர்ந்து பேசிய கருணாஸ், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே எனக்கு அமைச்சர் பதவி தருவதாகச் சொல்லியிருந்தார். ஆனால், அதற்குள் அவர் மறைந்துவிட்டார். எனக்கு எம்எல்ஏ பதவி போதும். பதவிகள் வரும்போது பணிவுடன் இருக்க வேண்டும் என்றார்.