தமிழ்நாடு
பரவும் கொரோனா, பொது இடங்களில் மாஸ்க்? சட்டசபையில் அமைச்சர் விளக்கம்!

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று கொரோனா பரவல் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அந்த தீர்மானத்தில், கொரோனா பரவலால் தமிழகத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 400-க்கு மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே காய்ச்சல் முகாம்கள் அமைக்க வேண்டும். வீடு வீடாக சென்று பரிசோதனைகள் செய்ய வேண்டும். தடுப்பூசி, ஆக்ஸிஜன் கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

#image_title
இதற்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர். படுக்கைகளின் எண்ணிக்கை, ஆக்ஸிஜன் கையிருப்பு, மருந்துகளின் கையிருப்பு போன்றவற்றை ஆய்வு செய்கின்றனர். முதல்வர் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையால் தற்போது 2,067 மெட்ரிக் டன் அளவுக்கு நம்மால் ஆக்ஸிஜனை சேமிக்க முடியும்.
தற்போதைய கொரோனா பாதிப்பு உயிர் பறிக்கும் பாதிப்பாக இல்லை. தொண்டை வலி, சளி, இருமல், உடல் வலி, காய்ச்சல் என்ற அளவிலேயே தான் இருக்கிறது. மருத்துவமனைகளில் முகக் கவசம் கட்டாயம் என்பதை அறிவித்திருக்கிறோம். கொரோனா பரவல் அதிகரித்தால் பொதுமக்கள் கூடும் இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்பதைக் கொண்டுவரலாம். தற்போது தமிழ்நாட்டில் பெரிய அளவிலான பதட்டம் இல்லை.
கடந்த ஒரு மாதத்தில் தமிழகத்தில் ஐந்து இறப்புகள் கொரோனா பாதிப்பால் நடந்துள்ளது. இவர்கள் யாரும் நேரடியாக கொரோனா பாதிப்பால் இறக்கவில்லை. இவர்கள் அனைவருக்கும் துணை நோய் இருந்துவந்துள்ளது என தெரிவித்தார் அமைச்சர்.