உலகம்
ஜப்பான் பிரதமரின் பொதுக்கூட்டத்தில் குண்டு வீச்சு: மயிரிழையில் உயிர் தப்பினார்!
ஜப்பானின் வகாயாமா பகுதியில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை நோக்கி பைப் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக ஜப்பான் பிரதமர் உயிர் தப்பினார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி ஜப்பானின் வகாயாமா பகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அங்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது அந்த கூட்டத்தில் பங்கேற்ற நபர் ஒருவர் பைப் வெடிகுண்டு ஒன்றை வீசினார் பிரதமரை நோக்கி வீசினார்.
அந்த வெடிகுண்டு பிரதமர் பேசிக்கொண்டிருந்த இடத்தின் மிக அருகில் வெடித்தது. இதனையடுத்து உடனடியாக பாதுகாப்புப் படையினர் பிரதமரை பத்திரமாக அழைத்துச் சென்றனர். இந்த தாக்குதலில் பிரதமர் காயங்கள் ஏதும் இன்றி உயிர் தப்பினார். குண்டு வீசிய நபரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதமரின் பொதுக்கூட்டத்தில் ஒருவர் வெடிகுண்டு வீசியது ஜப்பானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.