இந்தியா
பொங்கலுக்கு பின் 4 நாட்கள் வங்கிகள் இயங்காதா? வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
ஏற்கனவே இந்த மாதம் பொங்கல் விடுமுறை மற்றும் குடியரசு தின விடுமுறை நாட்களில் வங்கிகள் இயங்காது என்ற நிலையில் தற்போது ஜனவரி 28ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் வங்கிகள் இயங்காது என்ற தகவல் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வங்கி ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் வேலை நிறுத்தம் செய்ய போவதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில் வாங்கி சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய மத்திய அரசு அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவதாக அறிவித்ததை அடுத்து வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டதாக வங்கி ஊழியர்கள் சங்கங்கள் அறிவித்தது.
இந்த நிலையில் வாரத்தின் 5 நாட்கள் பணி, ஓய்வூதியம் புதுப்பித்தல், தேசிய ஓய்வூதிய முறையை ரத்து செய்தல், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேச்சு வார்த்தையை இன்னும் மத்திய அரசு தொடங்கவில்லை என்பதால் மீண்டும் வேலை நிறுத்த அறிவிப்பை அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக வங்கி தொழிற்சங்கங்களின் அமைப்பான அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஜனவரி 28ஆம் தேதி நான்காம் சனிக்கிழமை விடுமுறை என்பதும் ஜனவரி 29 ஞாயிறு விடுமுறை என்ற நிலையில் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ஜனவரி 28 முதல் 31 வரை வங்கிகள் இயங்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கிகளுக்கு நேரடியாக செல்லும் வாடிக்கையாளர்கள் கடும் பாதிப்படைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து ஜனவரி 28ஆம் தேதிக்கு முன்பே வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் பணிகளை முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
எங்களுடைய சங்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் இந்திய வங்கிகள் சங்கத்திடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்றும் நாங்கள் போராட்டத்தை மீண்டும் தொடங்குவதை தவிர வேறு வழியில்லை என்றும் எனவே ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விட முடிவு செய்திருப்பதாகவும் வங்கி ஊழியர்கள் சங்கம் கூறியுள்ளது. இந்த வேலை நிறுத்தத்தை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.