இந்தியா
ரூ.9,250 கோடி கடனை முன்கூட்டியே செலுத்திய அதானி.. மீண்டும் எடுத்த அதிரடி

அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பெர்க் நிறுவனத்தின் அறிக்கை காரணமாக இந்திய தொழிலதிபர் அதானி நிறுவனங்களின் பங்குகள் மிக மோசமாக சரிந்த நிலையில் அதானி எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக தற்போது மீண்டும் அதானி நிறுவனங்களின் பங்குகள் உயரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னால் அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹண்டன்பர்க் நிறுவனம் அதானி நிறுவனங்களின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தது. இதன் காரணமாக அதானி நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி அடைந்தன என்பதும் உலகின் மூன்றாவது பணக்காரராக இருந்த அதானி இருபதாவது இடத்திற்கு கீழ் தள்ளப்பட்டார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் அதானி நிறுவனங்களில் பங்குகள் சரிவை தடுப்பதற்காகவும் முதலீட்டாளர்களை நம்பிக்கையை பெறுவதற்காகவும் ரூ.9,250 கோடி கடனை முன்கூட்டியே திரும்ப செலுத்த முடிவெடுத்தது. இந்த முடிவு காரணமாக அதானி நிறுவனங்களின் பங்குகள் ஓரளவு உயர்ந்தாலும் நேற்று மீண்டும் சரியத் தொடங்கியதால் அதானி குழுமம் தற்போது மற்றொரு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
ரூபாய் 9250 கோடியை அடுத்து 500 மில்லியன் டாலர் கடனை மீண்டும் முன்கூட்டியே செலுத்த திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக அதானி நிறுவனங்களில் பங்குகள் வீழ்ச்சி அடைவது நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் படிப்படியாக இனி அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஹோல்சிம் லிமிடெட் சிமெண்ட் சொத்துக்களை வாங்குவதற்கு அதானி $4.5 பில்லியன் கடன் வாங்கினார். இந்த கடனை பார்க்லேஸ், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் மற்றும் டாய்ச் வங்கிகள் வழங்கின. இந்த கடனின் ஒரு பகுதியை தான் அதானி குழுமம் தற்போது திரும்ப செலுத்தவுள்ளது.
இதுகுறித்து அதானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கடனின் ஒரு பகுதியை மறுநிதியளிப்பதற்கு வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பேச்சுவார்த்தைக்கு பின் கடனை முன்கூட்டியே செலுத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.
இந்த நடவடிக்கை காரணமாக அதானி எண்டர்பிரைஸ் 9%, அதானி டிரான்ஸ்மிஷன், அதானி டோட்டல் கேஸ் மற்றும் அதானி பவர் 5%, அதானி போர்ட்ஸ் 3.5%, அதானி கிரீன் எனர்ஜி 4% சரிந்தாலும் அதானி வில்மர் 4% உயர்ந்துள்ளது. அதானி குழும நிறுவனங்களின் சரிவு நேற்று குறைந்துள்ளது. இனி படிப்படியாக மீண்டும் உயர வாய்ப்பு இருப்பதாகவும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.





















