சினிமா
ஏ.ஆர். ரஹ்மான் கருத்தால் பரபரப்பு: ’ஆஸ்கருக்குத் தவறான படங்கள் அனுப்புகிறோம்’

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கருக்குத் தவறான படங்கள் அனுப்பப்படுவதாகத் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடந்து முடிந்தது. இதில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படத்தின் ’நாட்டு நாட்டு’ பாடலும் ‘தி எலிபெண்ட் விஷ்பர்ஸ்’ ஆவணப்படமும் ஆஸ்கர் விருதுகளை வென்றது சினிமா ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஆஸ்கர் விருதுகளை வென்ற இசையமைப்பாளர் ரஹ்மான் சமீபத்தில் பேட்டிக் கொடுத்திருக்கிறார். அதில் அவர் பேசியிருப்பதாவது, ‘நான் திரையுலகில் நுழைந்த காலக்கட்டத்தில் அப்போது பல புதிய மாற்றங்கள் நடந்து கொண்டிருந்தது.
எனக்கும் நேரம் இருந்ததால் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். ஹாலிவுட் படங்கள் பல அப்போது ஆஸ்கர் விருதுகளை வென்றது. ஹாலிவுட் இசையை நாம் கேட்கும்போது நம் இசையை அவர்களை ஏன் கேட்க வைக்க முடியவில்லை என்று பலமுறை யோசிப்பேன். அதே சமயம், இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பி வைக்கப்படும் பல படங்கள் விருதுகளை பெற முடிவதில்லை. தவறான படங்களைத் தேர்ந்தெடுத்து நாம் அனுப்புவதும் அதற்கு ஒரு முக்கியக் காரணம்’ என ரஹ்மான் தெரிவித்துள்ளார். ரஹ்மானின் இந்தக் கருத்து இசை ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.