ஆரோக்கியம்
தொடர்ச்சியான சோர்வு இதய நோயின் ஆரம்ப அறிகுறி ஆக இருக்கலாம்!

மன அழுத்தம், வயது அல்லது தூக்கமின்மை போன்ற காரணங்களால் சோர்வு ஏற்படுகிறது என பலர் நினைத்துக் கொள்கின்றனர். ஆனால், போதுமான ஓய்வு எடுத்த பிறகும் தொடர்ச்சியான சோர்வு நீடித்தால், அது ஒரு மறைமுக இதயப் பிரச்சனையின் அறிகுறி ஆக இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இருதயநோய் நிபுணர் டாக்டர் சஞ்சய் போஜ்ராஜ், டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், “நன்றாக ஓய்வெடுத்து வாழ்க்கை முறையில் மாற்றம் செய்த பின்னரும் நாள்பட்ட சோர்வு இருந்தால், அது இதயம் திறம்பட செயல்படாததைக் குறிக்கலாம். இதயம் சரியாக இரத்தத்தை பம்ப் செய்ய முடியாமல் போனால், உடலில் ஆக்ஸிஜன் விநியோகம் குறைந்து சோர்வு ஏற்படும்” என்றார்.
இதை புறக்கணிப்பது உங்கள் உடல் தரும் முக்கிய எச்சரிக்கையை கவனிக்காமல் விடுவது போன்றது. சில சமயங்களில், இதுபோன்ற அமைதியான மாரடைப்புகள் (Silent Heart Attack) திடீர் நெஞ்சுவலி இல்லாமலேயே ஏற்படலாம். இந்நிலையில், தாடை வலி, தோள்பட்டை வலி, சோர்வு, அல்லது மூச்சுத்திணறல் போன்ற லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்படலாம்.
🩺 மாரடைப்பின் ஆரம்ப அறிகுறிகள்:
- நீடித்த சோர்வு அல்லது களைப்பு
- மார்பு, கைகள் அல்லது மேல் முதுகில் லேசான வலி
- தாடை அல்லது தோள்பட்டை வலி
- அஜீரணம் அல்லது வயிற்று அசௌகரியம்
- அன்றாட செயல்பாடுகளின் போது மூச்சுத்திணறல்
- உடல் உழைப்பு இல்லாமல் அதிக வியர்வை
இந்த அறிகுறிகள் சில நாட்கள் அல்லது வாரங்களுக்கு முன்பே தோன்றக்கூடும். இதனால், அவற்றை அலட்சியம் செய்யாமல் முன்கூட்டியே இதய பரிசோதனை செய்வது மிக அவசியம்.
ஆரம்பகால கண்டறிதலின் முக்கியத்துவம்:
இசிஜி, இரத்தப் பரிசோதனை மற்றும் இதய சோதனைகள் மூலம் இதய அழுத்தத்தை முன்கூட்டியே கண்டறிந்து, மருந்து அல்லது வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் சிகிச்சை பெற முடியும்.
தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது, இதயத்திற்கு ஆரோக்கியமான உணவு எடுத்துக்கொள்வது, மற்றும் மனஅழுத்தத்தை கட்டுப்படுத்துவது போன்ற சிறிய மாற்றங்களே இதய நோயிலிருந்து தற்காப்பு அளிக்க உதவும்.





















