இந்தியா
கனவில் கடவுள் கிருஷ்ணர்: அகிலேஷ் யாதவ் பேச்சை கிண்டல் செய்த பிரதமர் மோடி!

தனது கனவில் கடவுள் கிருஷ்ணர் வந்ததாக அகிலேஷ் யாதவ் பேசியதை பிரதமர் மோடி கிண்டலடித்து காணொளி மூலம் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அங்கு தீவிரமாக அரசியல் கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று காணொளி மூலம் பிரதமர் மோடி உத்தரப் பிரதேச மாநில தேர்தல் பிரச்சாரம் செய்தார்/ அப்போது சமீபத்தில் தினந்தோறும் தனது கனவில் கடவுள் கிருஷ்ணர் வருவதாகவும் உத்தரபிரதேசத்தில் தானே ஆட்சி அமைக்கப் போவதாகவும் அகிலேஷ் யாதவ் கூறியது குறித்து பிரதமர் மோடி கிண்டல் செய்தார்.
அவர் இது குறித்து கூறிய போது, ‘தற்போது சிலர் கனவு காண்கின்றனர், தூங்குபவர்களுக்கு தான் கனவு வரும், உத்தரபிரதேச மாநிலத்தை முன்னேற்ற வேண்டும் என்று தூங்காமல் விழித்துக் கொண்டு வருபவர்களுக்கு கனவு வராது என்று கூறினார்.
மேலும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும், சாலைகள் மூலம் உத்தரபிரதேச மாநிலம் பல மாநிலங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், முஸ்லிம் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பிற கட்சிகள் வன்முறையாளர்கள் கிரிமினல்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்திருப்பதாகவும் ஆனால் நல்லவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்கும் ஒரே கட்சியாக பாஜக உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு திட்டமும் அடிப்படை ஏழை குடும்பங்களுக்கு சென்றடைந்துள்ளதாகவும், எனவே இந்த தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார்.

















