இந்தியா
சிவன் பின்தங்கிய ஜாதியை சேர்ந்தவர்: பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு!

இந்து கடவுளான சிவபெருமான் பின்தங்கிய ஜாதியை சேர்ந்தவர் என பீகார் மாநில பாஜக அமைச்சர் பிரிஜ் கிஷோர் பிந்த் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். சர்ச்சையை ஏற்படுத்தினாலும் அவர் தனது கருத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் அம்மாநில ஆளுநருக்கு நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பாஜக அமைச்சர் பிரிஜ் கிஷோர் பிந்த், கடவுள்களில் உயர்ந்தவரான சிவன் சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட பிந்த் சாதியைச் சேர்ந்தவர் என குறிப்பிட்டார். இந்த விழாவில் பீகார் துணை முதல்வரும், பாஜக தலைவருமான சுஷில் குமார் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
பாஜக அமைச்சரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் செய்தியாளர்கள் இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், சிவ புராணத்தில் என்ன குறிப்பிட்டுள்ளதைத்தான் கூறினேன். வித்யாதர் மகாஜன் எழுதிய நூலில், சிவன் பிந்த் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்பட்டுள்ளது. கடவுள் ராமர் சத்ரியகுலத்தைச் சேர்ந்தவர் என்றும், கடவுள் கிருஷ்ணர் யாதவ குலத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறுகிறார்கள். அப்படி இருக்கும்போது சிவன் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க முடியாதா என பதிலளித்துள்ளார்.




















