இந்தியா
தவறாக நடக்க முயன்ற ஃபேஸ்புக் நண்பர்: 10 வகுப்பு மாணவி பரிதாப பலி!

சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் நண்பராக கிடைத்த ஒருவரை சந்திக்க சென்ற 10-ஆம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தெலுங்கானாவில் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவருக்கும் நவீன் ரெட்டி என்ற இளைஞருக்கும் இடையே ஃபேஸ்புக் மூலம் நட்பு மலர்ந்துள்ளது. இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்காமல் ஃபேஸ்புக்கில் மட்டும் பேசு வந்ததால், ஒருநாள் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். அதன்படி கடந்த 27-ஆம் தேதி ஒரு பாழடைந்த பகுதிக்கு அந்த மாணவியை வர சொல்லி தனியாக சந்தித்துள்ளார் நவீன்.
அப்போது நவீன் அந்த 10-ஆம் வகுப்பு மாணவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அந்த மாணவி அங்கிருந்து தப்பிக்க முயற்சித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நவீன் அந்த மாணவியை கீழே தள்ளியுள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அந்த மாணவியின் தலையில் பலமாக அடிபட்டுள்ளது.
இதனையடுத்து வலியால் துடித்த மாணவியை காப்பாற்ற யாரும் இல்லாததால் மாணவியின் தலையில் இருந்து அதிகமான ரத்தம் வெளியேறி மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சூழ்நிலையில் தங்கள் மகளை காணவில்லை என மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் மாணவி நவீனுடன் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து போலீசார் நவீனை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர் நடந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர் சிறுமியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஃபேஸ்புக் நண்பரை பார்க்க சென்ற 10-ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



















