தமிழ்நாடு
இந்தி மொழியை ஏன் கற்கக்கூடாது: நீதிபதிகள் சரமாறி கேள்வி

மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் இந்தி மொழியிலேயே இருப்பதாகவும் அதனை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில் இந்தி மொழியை ஏன் கற்க கூடாது என நீதிபதிகள் சரமாரியாக கேள்வி கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தொடர்ந்த பொதுநல வழக்கு ஒன்றில், ‘மத்திய அரசு நாடு முழுவதும் செயல்படுத்தும் திட்டங்களுக்கு ஹிந்தியில் தான் பெயர் வைக்கின்றது என்றும், அந்தத் திட்டங்கள் அப்படியே தமிழில் பயன்படுத்தப்படுகிறது என்றும், தமிழ் மொழியில் மொழிபெயர்த்து பயன்படுத்தினால் தமிழர்கள் புரிந்து கொள்வார்கள் என்றும் அதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா மற்றும் வேல்முருகன் அமர்வு இந்தி மொழியை ஏன் கற்க கூடாது என்றும் ஒரு மொழியை கற்பது பிறருடன் தொடர்பு கொள்ள தானே என்றும் மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கு ஆனது என்றும் மொழியை மொழியாக மட்டுமே கையாள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் மனுதாரர் விருப்பப்பட்டால் தமிழ் மொழி கழகம் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பு துறை ஆகியவற்றில் மொழி பெயர்த்து தருமாறு கோரிக்கை விடலாம் என்றும் கூறினார்.
இது குறித்து மனுதாரர் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதனை அடுத்து நீதிபதிகள் இந்த வழக்கை நவம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
தமிழகம் முழுவதும் ஹிந்தி எதிர்ப்பு கடந்த பல ஆண்டுகளாக இருந்துவரும் நிலையில் ஹிந்தி மொழியை ஏன் கற்க கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


















