தமிழ்நாடு
மதுபானம் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருளா? மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி!

இன்றைய அரசியல் சூழலில், ஆட்சிக்கு வருவதற்கு முன் மது ஒழிப்பை தேர்தல் வாக்குறுதியில் சேர்க்கிறார்களே தவிர, இதுவரை எந்த ஆளும் கட்சியும் செயல்படுத்தவில்லை. இந்நிலையில், ஆங்காங்கே மதுக் கடைகளை மூடக் கோரி போராட்டங்கள் மற்றும் மனு கொடுத்தாலும் எந்தப் பயனும் இல்லை. இந்நிலையில், மதுரை ஐகோர்ட் கிளை, “மது அத்தியாவசியப் பொருளா” எனக் கேள்வி எழுப்பியுள்ளது.
மதுபானக் கடை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுக்காவில் உள்ள வாகைக்குளம் எனும் கிராமத்தில் செயல்பட்டு வரும் மதுபானக் கடையை அகற்றக் கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இதில், மதுபானக் கடையை சுற்றிலும் பல சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். இதன் காரணமாக மோதல் சம்பவங்கள் ஏற்பட்டு சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், மதுக்கடை இருக்கக் கூடிய பகுதியானது சிறுவர்கள் மற்றும் பெண்கள் அதிகமாக சென்று வரக் கூடிய பகுதியாக இருக்கிறது. ஆகவே இந்த மதுபானக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் எனக் கோரி இந்த வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அத்தியாவசியமானப் பொருளா?
அப்போது டாஸ்மாக் தரப்பில், மதுக்கடை உரிய அரசு அனுமதியைப் பெற்று செயல்பட்டு வருவதாகவும், சுமார் 20 கிலோமீட்டர் தொலைவுக்கு எந்த மதுபானக் கடைகளும் இல்லை எனவும் கூறப்பட்டது. இதற்கு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள், 20 கி.மீ தொலைவிற்கு ஒரு மதுக் கடை தான் இருக்கிறது எனக் கூறுவதற்கு, “பொதுமக்களுக்கு மதுபானம் மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படும் பொருளா?” என கேள்வி எழுப்பினர்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக உள்துறை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர், கலால் மற்றும் மதுவிலக்கு துறை கூடுதல் செயலர் மற்றும் விருதுநகர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கானது ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.