கிரிக்கெட்
கேப்டன் பதவியில் இருந்து விலகிய ஜடேஜா அணியில் இருந்தும் விலகலா?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து சமீபத்தில் விலகிய ஜடேஜா தற்போது அணியில் இருந்து விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் 2022ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் தோனி அவருக்கு வழிகாட்டியாக இருப்பார் என்று கூறப்பட்டது
ஆனால் ஜடேஜா தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக தோல்வி அடைந்ததை அடுத்து ஜடேஜா தனது பேட்டிங் மற்றும் பவுலிங்கில் திறமையை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து ஜடேஜா தனது கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதனால் மீண்டும் தோனி கேப்டன் ஆனார்.
இந்த நிலையில் கடந்த போட்டியில் காயம் காரணமாக ஜடேஜா விளையாடவில்லை என்ற நிலையில் அடுத்து வரும் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்னும் மூன்று லீக் போட்டிகள் உள்ளன. இதனை அடுத்து அடுத்த சுற்றுக்கு ஒருவேளை தகுதி பெற்றால் அடுத்தடுத்த போட்டிகளில் சிஎஸ்கே விளையாடும். இந்த நிலையில் அடுத்து வரும் மூன்று போட்டிகளிலும் ஜடேஜா விளையாட மாட்டார் என சிஎஸ்கே அணி நிர்வாகம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.