கிரிக்கெட்
ஜெய்ஸ்வால் அதிரடி அரைசதம்: கொல்கத்தாவை பந்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ்!

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்று நடைபெற்ற 56வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான், முதலில் பந்துவீச முடிவு செய்தது.
கொல்கத்தா சொதப்பல்
முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கி விளையாடியது.
ராஜஸ்தான் வெற்றி
தொடக்க வீரர் ஜெய்ஸ்வாலின் அதிரடி ஆட்டத்தால், ராஜஸ்தான் அணி 13.1 ஒவர்களிலேயே 1 விக்கெட்டை மட்டும் இழந்து 151 ரன்களை எடுத்து அபார வெற்றியைப் பெற்றது. 47 பந்துகளை எதிர்கொண்ட ஜெய்ஸ்வால் 13 பவுண்டரி மற்றும் 5 சிக்சர்கள் உட்பட 98 ரன்களும், சஞ்சு சாம்சன் 48 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர்.
ஜெய்ஸ்வால் அதிரடி அரைசதம்
ராஜஸ்தான் அணியில் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால், கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா வீசிய முதல் ஓவரில் 26 ரன்களை எடுத்தார். அதனைத் தொடர்ந்து ஜெய்ஸ்வால் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். வெறும் 13 பந்துகளிலேயே தனது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார்.
ஐபிஎல் வரலாற்றிலேயே அதிவேக அரைசதம் அடித்து ஜெய்ஸ்வால் நேற்று சாதனைப் படைத்துள்ளார். இதற்கு முன்னர் கே.எல்.ராகுல் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகிய இருவரும் 14 பந்துகளில் அரைசதம் அடித்து இருந்தனர். இதனை தற்போது ஜெய்ஸ்வால் முறியடித்து உள்ளார்