கிரிக்கெட்
சென்னை அபார பந்துவீச்சு: 27 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது!

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற 55வது லீக் ஆட்டத்தில் சென்னை அணியும், டெல்லி அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்குவாட், டெவன் கான்வே ஆகிய இருவரும் களமிறக்கினர். கான்வே 10 ரன்களிலும், கெய்குவாட் 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த மொயின் அலி 7 ரன்களிலும், ரகானே 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
சென்னை 168 ரன்கள்
அடுத்ததாக களமிறங்கிய ஷிவம் துபே 25 ரன்களில் அவுட் ஆக, ராயுடு 23 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ஜடேஜா மற்றும் கேப்டன் தோனி கடைசியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜடேஜா 21 ரன்கள் எடுத்து அவுட் ஆக, தோனி 20 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை எடுத்தது. டெல்லி அணித் தரப்பில் அதிகபட்சமாக மிச்சேல் மார்ஷ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
சென்னை வெற்றி
168 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் டெல்லி அணியின் சார்பில் வார்னர் மற்றும் பிலிப் சால்ட் ஆகிய இருவரும் களம் கண்டனர். வார்னர் ரன் ஏதும் எடுக்காமலும், பிலிப் சால்ட் 17 ரன்களிலும், மிட்செல் மார்ஷ் 5 ரன்களிலும், எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
அடுத்து மணீஷ் பாண்டே 27 ரன்களில் வெளியேற, ரிலே ரூசோவும் 35 ரன்களில் கேட்ச் ஆகிய அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய அக்சர் பட்டேல் அதிரடியாக 21 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் ரிப்பல் படேல் 10 ரன்களும், லலித் யாதவ் 12 ரன்களும் எடுத்து வெளியேறினர். முடிவில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்களை மட்டுமே சேர்ததது. சென்னை அணி சார்பில் பதிரனா 3, தீபக் சாஹர் 2, ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றியைப் பெற்றது.