கிரிக்கெட்
3 ரன் வித்தியாசத்தில் சென்னை அதிர்ச்சி தோல்வி: தோனி, ஜடேஜா அதிரடி வீணானது!

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-வது லீக் ஆட்டத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. விருவிருப்பான இந்த ஆட்டத்தில் சென்னை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வியை சந்தித்தது.

#image_title
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ஜாஸ் பட்லர் 52 ரன்களும் படிக்கல் 38 ரன்களும் எடுத்தனர். சென்னை அணியின் ஆகாஷ் சிங், டேஷ்பாண்டே, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு சென்னை அணி களமிறங்கியது. இந்த தொடரில் சிறப்பாக ஆடி வந்த சென்னை அணியின் ருத்ராஜ் கெய்க்வாட் இந்த போட்டியில் சொதப்பினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வே சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ராஹானேவும் அதிரடியாக 31 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியில் கேப்டன் தோனியும் ஜடேஜாவும் இணைந்து அணியை மீட்டனர். இறுதி 2 ஓவர்களில் சென்னை அணிக்கு 40 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரில் ஜடேஜா 19 ரன்களை விளாச இறுதி ஓவரில் சென்னை அணிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸர்களை தோனி பறக்கவிட கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் கடைசி பந்தில் சென்னை அணியால் 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ராஜஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜடேஜா 25 ரன்களுடனும் தோனி 32 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஆட்டநாயகன் விருது ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு வழங்கப்பட்டது.