இந்தியா
சமையல் கேஸ் சிலிண்டர் விலை திடீர் உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி

கடந்த சில மாதங்களாக சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தி வருவது இல்லத்தரசிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது தெரிந்ததே. குறிப்பாக கடந்த ஒரு ஆண்டுக்குள் ரூபாய் 285 சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளது என்பதும் கடந்த ஆண்டு சுமார் 600 ரூபாய் இருந்த சிலிண்டர் தற்போது நேற்றுவ் வரை ரூபாய் 875.50 என விற்பனையாகி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று முதல் மீண்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 25 உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூபாய் 25 இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளதை அடுத்து ரூபாய் 900.50 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது. இதே ரீதியில் சென்றால் இன்னும் ஒரு சில மாதங்களில் ரூ.1000 என சிலிண்டர் விலை உயரும் அபாயம் உள்ளது.

அதே போல் வணிக பயன்பாட்டிற்கு சிலிண்டர் விலை ரூபாய் 75 உயர்த்தப்பட்டு ஒரு சிலிண்டர் விலை ரூபாய் 1831.50 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வணிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலையை அதிகரித்துள்ளதை அடுத்து இந்தியாவிலும் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் அளித்த போதிலும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதற்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: உஷார்.. செப்டம்பர் முதல் உங்கள் தினசரி வாழ்க்கையைப் பாதிக்கும் புதிய மாற்றங்கள்!
















