இந்தியா
வருங்கால வைப்பு நிதி பெறுவதில் புதிய விதிமுறைகள் அமல்.. என்னென்ன தெரியுமா?
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் EPFO என்ற வருங்கால வைப்பு நிதி பிடிக்கப்பட்டு வரும் என்பதும் அந்த தொகை வட்டியுடன் ஊழியர்கள் விரும்பும் போது அல்லது ஓய்வு பெறும் போது கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வருங்கால வைப்பு நிதியை பெறுவதில் தற்போது புதிய விதிகள் அமல் படுத்தப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து விரிவாக பார்ப்போம்.
2022 ஆம் ஆண்டு விரைவில் முடிவுக்கு வரவுள்ள நிலையில் நாட்டில் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு மற்றும் நிவாரணம் அளித்துள்ளது. குறிப்பாக அனைத்து ஊழியர்களுக்கு EPF என்ற வருங்கால வைப்பு நிதி திட்டம் ஊழியர்களின் பாதுகாப்பு உள்ளது.
இந்த நிலையில் EPF கணக்கு வைத்திருப்பவர்களின் உரிமைகோரல்கள் விரைவாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் எந்த ஒரு காரணமும் கூறாமல் யாருடைய கோரிக்கையும் நிராகரிக்கப்படக்கூடாது என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில்
நிறுவனங்கள் அல்லது தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் EPF பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த நிதி தேவைப்படும் நேரத்தில் வட்டியுடன் திருப்பித் தர வேண்டும் என்ற விதி உள்ளது.
இந்த நிலையில் EPF கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களுக்குப் பணம் தேவைப்படும்போது, விண்ணப்பித்தால் உடனே எவ்வித காரணமும் கூறாமல் அவர்களது EPF கோரிக்கையை நிறைவேற்றி தரவேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும் தெளிவான காரணத்தை தெரிவிக்காமல் கோரிக்கையை நிராகரிக்கக்கூடாது என்றும், நிதியை வழங்க நீண்ட காலம் எடுக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
EPFO தொடர்பான விண்ணப்பம் பெறப்பட்டால், அதை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சகம் தனது புதிய வழிகாட்டுதலில் கூறியுள்ளது. படிவத்தை பூர்த்தி செய்யும் போது விண்ணப்பதாரரிடமிருந்து ஏதேனும் குறைபாடு இருந்தால், தெளிவான காரணத்தை கூறி அதை நீக்குமாறு அறிவுறுத்த வேண்டும் என்றும், அதை ஒரு காரணமாக எடுத்து தாமதம் செய்ய கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்பாராத காரணத்தால் EPF குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், விண்ணப்பதாரர் புதிய விண்ணப்பத்தைத் தாக்கல் செய்ய அவரை அழைத்து உதவ வேண்டும் என்றும், அவருடைய முந்தைய விண்ணபத்தின் குறைபாடுகளை அவருக்கு விளக்கி உதவ வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
EPF குறித்த புகார்கள் அரசுக்கு நீண்ட நாட்களாக வந்த வண்ணம் உள்ளதால் மத்திய அரசு இந்த புதிய விதியை அமல்படுத்தியுள்ளது. மேலும் EPFO விண்ணப்பத்தை எந்தவொரு தெளிவான காரணத்தையும் தெரிவிக்காமல் நிராகரிப்பதாக அரசாங்கத்திற்கு நீண்ட காலமாக புகார்கள் வந்துள்ளதால் இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்க கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.