இந்தியா
Kargil Vijay Diwas: கார்கில் போர் வெற்றி தினம்.. இந்திய ராணுவம் பாகிஸ்தான் வீரர்களை துவம்சம் செய்த தினம்!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கார்கில் போர் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது.
கார்கில் விஜய் திவாஸ் அல்லது கார்கில் போர் வெற்றி தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது?
1999-ம் ஆண்டு நடுங்கும் குளிரில் இந்திய எல்லைப் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தினரை எதிர்த்துப் போரிட்டு நாட்டுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்த ராணுவ வீரர்களைப் பெருமைப் படுத்தும் விதமாகக் கொண்டாடப்படும் நாளே கார்கில் விஜய திவாஸ் என அழைக்கப்படும் கார்கில் போர் வெற்றி தினம்.
கடந்த 23 ஆண்டுகளாக கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய வரலாற்றில் 1999-ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போர்தான் மிகவும் தீவரமாக நடைபெற்ற போர் ஆகும். 1999-ம் ஆண்டு மே 3-ம் தேதி தொடங்கி ஜூலை 26-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போருக்கு ஆப்ரேஷன் விஜய் என பெயரிடப்பட்டது. 3 கட்டங்களாக இந்த போர் நடைபெற்றது.
இந்த போர் முழுவதும் கடுமையான பனிப் பொழிவு இருக்கும் பகுதிகளில் நடந்தது. இந்தியா இமைய மலைக்குக் கீழ் இருக்கும் நிலையில், மேல் இருந்து தாக்கும் பாகிஸ்தானுக்குச் சாதகமான போராக இருந்தது. இருப்பினும் இந்திய ராணுவம் பாகிஸ்தான் இராணுவத்தைத் திறம்பட எதிர்த்து ஜூலை 26-ம் தேதி வெற்றியை நிலை நாட்டியது. போரின் போது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒட்டுமொத்த தேசமும் ராணுவ வீரர்களுக்குத் துணையாக நின்றது.
போரின் போது 527 வீரர்களை இந்திய ராணுவம் இழந்தது. 1,363 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தான் தரப்பில் 700 கொல்லப்பட்டனர். தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் சரவணன் உள்ளிட்ட பல்வேறு ராணுவ வீரர்கள் நாட்டுக்காக தங்களது உயிரை தியாகம் செய்ததற்கா பெருமைப்படுத்தப்பட்டனர்.
இந்த ஆண்டு ஜூலை 26-ம் தேதி நாட்டுக்காக தங்களது உயிரை வீரப் போரிட்டு தியாகம் செய்தவர்களுக்கும், எல்லையில் இன்றும் நமது தேசத்தைக் காத்து வரும் அனைத்து ராணுவ வீரர்களுக்கும் சேர்த்து வீர வணக்கம் செலுத்துவோம்.