இந்தியா
கோடை விடுமுறையால் திருப்பதியில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்!

இந்தியா முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால், திருப்பதி மலைக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் இருக்கும் 30 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி, சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சிலா தோரணம் வரையில் வரிசையில் காத்திருந்தனர்.
திருப்பதியில் பக்தர்கள் கூட்டம்
திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில், திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. மூலவரான ஏழுமலையானை தரிசிப்பதற்கு கிட்டத்தட்ட 30 மணி நேரங்கள் ஆகிறது. ஆகவே பக்தர்கள் தேவஸ்தானத்திற்கு ஒத்துழைப்புத் தர வேண்டும். கடந்த சில நாட்களாக திருமலையில் பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது.
தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு நீண்ட தொலைவு மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. திருமலையில் இருக்கும் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ், நாராயணகிரி தோட்டத்தில் இருக்கும் கொட்டகைகள் போன்றவற்றில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து, அந்திமாலை 5 மணி வரையில் 36,900 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று முன்தினம் திருமலையில் 79,207 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 41,427 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர். அன்றைய ஒருநாள் உண்டியல் வருமானம் மட்டும் ரூ.3 கோடியே 19 லட்சம் கிடைத்து உள்ளதாக, திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.