தமிழ்நாடு
ப.சிதம்பரம் பூமிக்கு பாரமாக இருக்கிறார்: எடப்பாடி பழனிசாமி காட்டம்!

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அதிமுக பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு கொண்டு வரும் பல்வேறு திட்டங்களுக்கு அதிமுக வரவேற்பு தெரிவித்து பேசி வருகிறது. முத்தலாக், காஷ்மீர் விவகாரம் என பல விஷயங்களில் அதிமுக பாஜகவுக்கு ஆதரவாக இருந்து வருகிறது.
அதிமுகவின் இந்த அனுகுமுறை கவனிக்கப்பட்டு வரும் நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் இது தொடர்பாக அதிமுகவை விமர்சித்துள்ளார். தமிழகத்தை இரண்டாக பிரித்தால் கூட அதனை தலைவணங்கி அதிமுக ஏற்கும் என விமர்சித்துள்ளார் ப.சிதம்பரம்.
இந்நிலையில், டெல்டா விவசாயிகள் பாசனத்துக்காகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையிலிருந்து இன்று காலை தண்ணீர் திறந்து வைத்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், தமிழகத்தைப் பிரித்தால் கூட அதனை அதிமுக தலை வணங்கி ஏற்கும் என்று ப.சிதம்பரம் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ப.சிதம்பரம் எத்தனை ஆண்டுக் காலம் மத்திய அமைச்சராக இருந்தார். அவரால் நாட்டுக்கு என்ன பயன் பூமிக்குத்தான் பாரம். அவருடைய பேச்சைப் பொருட்படுத்த வேண்டியதில்லை என்றார் அதிரடியாக.
















