இந்தியா
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படை தளபதி பயணம் செய்தாரா? அமைச்சர் ராஜ்நாத்சிங் தமிழகம் விரைவு!

தமிழகத்தில் உள்ள குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில் இந்த ஹெலிகாப்டரில் முப்படை தளபதி பயணம் செய்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்ததில் இந்த விபத்தில் இதுவரை ராணுவ அதிகாரிகள் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசி விபரங்கள் கேட்டு அறிந்ததாகவும் மீட்பு பணிகளை உடனடியாக துரிதப்படுத்தவும் காயம் அடைந்தவருக்கு உரிய சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவர்கள் பயணம் செய்ததாகவும் அவர் தனது மனைவியுடன் பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த ஹெலிகாப்டர்கரில் 2 விமானிகள் மற்றும் 9 ராணுவ வீரர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் நிலை என்ன என்பது பற்றி தகவல் வெளியாகவில்லை. இந்த நிலையில் குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தமிழகம் வருவதாகவும், பிரதமர் தலைமையில் நடைபெறும் ஆலோசனையில் இது குறித்து அவர் விளக்கம் அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


















