இந்தியா
காதலித்த பெண்ணை பழிவாங்க மிக்ஸியில் வெடிகுண்டு வைத்து அனுப்பிய வாலிபர்.. நிகழ்ந்த விபரீதம்
ஒரு தலையாக ஆன்லைனில் காதலித்த பெண்ணை பழிவாங்குவதற்காக வாலிபர் ஒருவர் மிக்ஸியில் வெடிகுண்டு வைத்து அனுப்பிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் 28 வயதான வாலிபர் ஒருவர் 32 வயது பெண் ஒருவரை சமூக வலைதளம் மூலம் காதலித்ததாக தெரிகிறது. ஆனால் அந்த காதலை அந்த பெண் ஏற்கவில்லை. இந்த நிலையில் அந்தப் பெண்ணைக் கவர்வதற்காக ஒருசில பரிசுப் பொருள்களை கூரியர் மூலம் வாலிபர் அனுப்பி உள்ளார். ஆனால் அந்த பெண் எந்த பொருளையும் பெற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனது காதலை ஏற்க மறுத்த பெண்ணை பழி வாங்குவதற்காக மிக்ஸி ஒன்றை தனது பெயரை குறிப்பிடாமல் அந்த பெண்ணுக்கு அனுப்பி இருந்தார். இந்த நிலையில் கூரியர் அலுவலர் அந்த பார்சலை எடுத்துக்கொண்டு அந்த பெண்ணிடம் சென்று வழங்கியபோது அந்த பெண் அந்த பார்சலை ஏற்க மறுத்துள்ளார். பார்சலை அனுப்பியவரிடமே திருப்பி அனுப்பிவிடுங்கள் என்று கூறியதாக தெரிகிறது.
இந்த நிலையில் கூரியர் அலுவலர் அந்த மிக்சியை அலுவலத்திற்கு கொண்டு வந்து அந்த மிக்ஸி வேலை செய்கிறதா என்று சோதனை செய்துள்ளார். அப்போது அந்த மிக்ஸி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இதனையடுத்து காவல்துறையினர் இது குறித்து ஆய்வு செய்த போது பெண்ணை பழி வாங்க வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே உள்ளே வெடி பொருளை வைத்து மிக்ஸியை இயக்கும்போது வெடிக்கும் வகையில் செட் செய்தது தெரியவந்தது.
முதலில் இது பயங்கரவாத வழக்கு என்று சந்தேகப்பட்ட நிலையில் அதன் பிறகு பெண்ணை பழி வாங்குவதற்காக செய்த சம்பவம் என்பது புரிய வந்தது. இதனை அடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பெண்ணுக்கு மிக்ஸி அனுப்பிய வாலிபரை கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மிக்சி வெடித்ததால் படுகாயம் அடைந்த ஊழியர் தற்போது குணமாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.