தமிழ்நாடு
ஊரடங்கை மீறி வெளியே சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுமா..?- போலீஸ் முக்கியத் தகவல்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை, ஒரு நாளில் 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதனால் இன்று முதல் 24 ஆம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகள் அடங்கிய முழு முடக்க உத்தரவை தமிழக அரசு அமல் செய்துள்ளது.
இந்த முழு முடக்கத்தின் போது, மதியம் 12 மணி வரை மட்டும் தான் மளிகை கடைகள், மீன் மற்றும் இறைச்சிக் கடைகள் திறந்திருக்கும், ஆன்லைன் வணிக தளங்கள் செயல்பட அனுமதியில்லை, அவசியத் தேவையுள்ள தனியார் நிறுவனங்கள் மட்டுமே செயல்படும், உரிய காரணங்களின்றி மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய முடியாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

இந்த ஊரடங்கின் போது தனி நபர்கள் வாகனங்களில் வெளியே சென்றால், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்கிற வதந்தி பரவி வருகிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக டிஜிபி திரிபாதி, ‘ஊரடங்கின் போது தமிழக காவல் துறையினரல் பொது மக்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். சாலையோர வியாபாரிகள் மற்றும் வணிகர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும்.
ஊரடங்கை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்யக் கூடாது. மாறாக அந்த வாகனங்களை புகைப்படம் எடுத்து வழக்கு மட்டுமே பதிவு செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.




















