இந்தியா
பார்ட்டி ஃபண்ட் பணம் அரசுக் கணக்கில் சேர்க்க முடியுமா? விதிகள் என்ன சொல்கின்றன?

ஆளும் கட்சியின் கட்சி நிதியில் (Party Fund) உள்ள கறைபடிந்த (Tainted) பணத்தை அரசின் கணக்கில் அதிகாரப்பூர்வமாக வரவு வைக்க முடியுமா? – தமிழ்நாடு கருவூலக் குறியீடு (Tamil Nadu Treasury Code) என்ன கூறுகிறது
இந்திய அரசியலமைப்பின்படியும், தமிழ்நாடு கருவூலக் குறியீட்டின்படியும் அரசு நிதி (Government Money) மற்றும் அரசியல் கட்சி நிதி (Political Party Fund) ஆகியவை முற்றிலும் தனித்தனி சட்ட அடையாளங்களைக் கொண்டவை. ஒரு அரசியல் கட்சி ஆளும் கட்சியாக இருப்பதால் மட்டுமே அதன் கட்சி நிதி அரசின் நிதியாக மாறிவிடாது. அதுபோல, கட்சி விரும்பினாலே அந்தப் பணத்தை அரசுக் கருவூலத்தில் (Treasury) நேரடியாகச் செலுத்தவும் முடியாது.
தமிழ்நாடு கருவூலக் குறியீடு (Tamil Nadu Treasury Code, Volume I) படி, அரசுக் கணக்கு (Government Account) என்பது இந்திய அரசியலமைப்பின் 266 மற்றும் 267ஆம் ஷரத்துகளின் கீழ் அமைந்துள்ள:
ஒருங்கிணைந்த நிதியம் (Consolidated Fund),
அவசரநிலை நிதியம் (Contingency Fund),
பொதுக் கணக்கு (Public Account)
ஆகியவற்றைக் கொண்டதாகும்.
Treasury code Rule 7 is the key provision. ( Section V – Payment of moneys into the Government Account )
இந்த விதியின் அடிப்படை நோக்கம்:
அரசு ஊழியர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ பணியின் காரணமாகப் பெறும் அனைத்து அரசுப் பணமும் தாமதமின்றி முழுமையாக அரசுக் கணக்கில் செலுத்தப்பட வேண்டும்.
இதன் பொருள்: வரிகள் (Taxes) கட்டணங்கள் (Fees) அபராதங்கள் (Fines) ராயல்டி (Royalty) அரசு வசூலிக்கும் பிற வருவாய்கள் போன்றவை அரசுக் கருவூலத்தில் கட்டாயமாகச் செலுத்தப்பட வேண்டும். ஆனால் அரசியல் கட்சிக்கு வழங்கப்படும் நன்கொடைகள் அல்லது கட்சி நிதி, அரசு ஊழியர் தனது அதிகாரப்பூர்வ பதவியில் பெற்ற வருவாய் அல்ல. எனவே அவை Treasury Rule 7-ன் கீழ் அரசுக் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டிய பணமாகக் கருதப்படாது.
அரசியல் கட்சியின் கறைபடிந்த பணம் அரசிடம் சேர வேண்டுமானால், அது சட்டத்தின் கீழ் நடைபெற வேண்டும். உதாரணமாக: நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பறிமுதல், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பறிமுதல், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இணைப்பு (Attachment) மற்றும் பறிமுதல், வருமான வரித்துறையின் நடவடிக்கைகள், விசாரணை அமைப்புகளின் நடவடிக்கைகள்,
நீதிமன்றம் அல்லது சட்டம் குறிப்பிட்ட தொகையை அரசுக்கு ஒப்படைக்க உத்தரவிடுதல் போன்ற வழிகளில்தான் அந்தப் பணம் அரசுக் கணக்கில் சேர்க்கப்படும்.
அரசுக்கு இவ்வளவு ரூபாய் கடன் இருக்கிறது அது ஒவ்வொரு குடிமகனுக்கும் பகிர்ந்து கொள்ளப்பட்டால் இவ்வளவு ரூபாய் வருகிறது என ஒரு குடிமகன் நினைத்து அவர் பங்காக பணத்தை அரசு கணக்கிற்கு செலுத்த முடியுமா
பதில் முடியாது
ஏன் முடியாது?
அரசின் கடன் என்பது தனிநபர்களுக்குப் பிரிக்கப்பட்ட தனிப்பட்ட கடன் அல்ல. அது அரசின் ஒட்டுமொத்த நிதிப் பொறுப்பு (Public Debt). அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான அதிகாரமும், நடைமுறையும் அரசிடமே உள்ளது.
அப்படியானால் குடிமகன் அரசுக்கு பணம் கொடுக்க முடியாதா?
முடியும். ஆனால் அது சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட வழிகளில் மட்டுமே.
உதாரணமாக:
வரி செலுத்தலாம். அரசு அறிவித்துள்ள நிவாரண நிதிகளுக்கு நன்கொடை வழங்கலாம். அரசு ஏற்க அனுமதித்துள்ள குறிப்பிட்ட நிதிகளுக்கு (Fund) தொகை செலுத்தலாம். அரசு குறிப்பிட்ட நோக்கத்திற்காக தன்னார்வ நன்கொடைகளை ஏற்கும் திட்டம் இருந்தால் அதில் பங்கேற்கலாம். இவ்வாறு செலுத்தப்படும் தொகைகள் அரசின் உரிய கணக்குத் தலைப்புகளில் ( head of accounts ) வரவு வைக்கப்படும்.
ஒரு குடிமகன் தனிப்பட்ட முறையில் Treasury-க்குச் சென்று,
“தமிழ்நாடு அரசின் ₹… லட்சம் கோடி கடனில் என் பங்கு ₹50,000. இதை வாங்கி அரசுக் கடனைக் குறைத்துக் கொள்ளுங்கள்.” என்று கூறி பணம் செலுத்துவதற்கு தற்போது பொதுவான சட்ட நடைமுறை இல்லை. அரசு அதற்கென ஒரு திட்டம், நிதி அல்லது சட்ட ஏற்பாடு செய்திருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.
பார்டி நிதி என வாங்கியதாகச் சொல்லப்படும் பணம் அரசு கஜான்னாவுக்கு ( கருவூலத்துக்கு ) வரவு வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என மாண்புமிகு முதலமைச்சர் சட்டமன்றத்தில் பேசும் போது சொல்லியது தவறு. நடைமுறை வேறாக உள்ளது.
அரசு ஊழியர்கள் பணி அவசியம் காரணமாக துறை சார்ந்த தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் Department tests அதில் Madras Treasury code என்று அழைக்கப்பட்டு பின்னர் Tamilnadu Treasury code என்று மாற்றப்பட்டு தற்போது நடைமுறையில் இருக்கும் விதிகள் சார்ந்த தேர்வும் எழுத வேண்டும்.
இந்த விதிகள் அரசு வலைத் தளத்தில் பதிவிறக்க இலவசமாகக் கிடைக்கிறது
வசனகர்த்தாக்கள் / எழுதிக் கொடுப்பவர்கள் கவனமாக எழுதிக் கொடுக்கவும்
இந்த உலகம் புளகாங்கித ஆசாமிகள் மட்டும் கொண்டதில்லை. யோசிக்கத் தெரிந்தவர்களும் உண்டு இங்கே.















