ஆன்மீகம்
வைகாசி ரிஷப அமாவாசை: அக்னி தீர்த்தத்தில் ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம் செய்து, ராமநாதசுவாமியை தரிசித்தனர்!

ரிஷப லக்கினத்தில் வந்த வைகாசி அமாவாசை நாளை முன்னிட்டு, ராமேஸ்வரத்தில் பக்தர்களின் பெரும் திரள்வும், புண்ணிய தீர்த்தக் கடலிலும், ராமநாதசுவாமி கோவிலிலும் ஆன்மிக காட்சிகளும்…
வைகாசி மாத அமாவாசை தினமான இன்று, ரிஷப லக்கினத்தில் இது நிகழ்ந்ததால், ஆன்மிக ரீதியாக முக்கியமான தினமாகக் கருதப்பட்டது. இதையடுத்து, ராமேஸ்வர அக்னி தீர்த்தக் கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
அவர்கள், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும், எள்ளு பிண்டம் வைத்து பூஜை செய்தும், புரோகிதர்களின் வழிகாட்டுதலுடன் பித்ரு கடமைகளை நிறைவேற்றினர். இதனைத் தொடர்ந்து ராமநாதசுவாமி கோவிலின் 22 புனித தீர்த்தங்களில் ஸ்நானம் செய்து, நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமியும் பர்வதவர்த்தினி அம்மனையும் தரிசித்தனர்.
ராமேஸ்வரம் – மூன்று பெருமை வாய்ந்த புண்ணிய பூமி:
ராமேஸ்வரம், காசிக்கு இணையான புண்ணிய ஸ்தலமாகவும், தீர்த்தம், மூர்த்தி, ஸ்தலமாகவும் மதிக்கப்படுகிறது. அமாவாசை தினங்களில் இங்கு தர்ப்பணம் செய்தால் முன்னோர்களின் ஆசீர்வாதம் பெற்றுத் தானாகவே வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில், பக்தர்கள் வெகுவாக வந்துள்ளனர்.
திருச்சி பகுதியைச் சேர்ந்த புரோகிதர் லெட்சுமணன் கூறியதாவது,
“இன்று வைகாசி அமாவாசை ரிஷப லக்கினத்தில் வந்ததால், துலாம் ராசிக்காரர்களுக்கு சிறந்த யோகமான நாள். மற்ற ராசிக்காரர்களுக்கும் ஞானம், தொழில் வளர்ச்சி, கல்வி முன்னேற்றம் போன்ற பல நன்மைகள் கிட்டக்கூடும்” என்றார்.



















