ஆன்மீகம்
மகாளய அமாவாசை 2025 – முன்னோர்களை வணங்க வேண்டிய சுபநேரம் மற்றும் முக்கியத்துவம்!

மகாளய அமாவாசை நாளில் முன்னோர்களை வணங்கி தர்ப்பணம் செய்வது மிகப் பெரிய புண்ணியமாக கருதப்படுகிறது. நம் சந்ததிக்கு முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்குமென நம்பப்படுகிறது.
மாதந்தோறும் அமாவாசை வரும் நிலையில், ஆடி அமாவாசை, புரட்டாசி மாத மகாளயப்பட்ச அமாவாசை, தை அமாவாசை ஆகிய மூன்று அமாவாசைகள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக மதிக்கப்படுகின்றன. வழக்கமான அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கான திதி, தர்ப்பணம் செய்வதில் தவறியவர்கள், இந்த மூன்று தினங்களில் தர்ப்பணம் செய்தால் ஆண்டு முழுவதும் புண்ணியம் சேரும் என்பது ஐதீகம்.
இந்த ஆண்டு மகாளய அமாவாசை செப்டம்பர் 21, 2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வருகிறது. “மகாளய பட்சம் செய்யாதவனுக்கு மங்களம் இல்லை” என்ற பழமொழி உண்டு. வசிஷ்ட முனிவர், தசரதர், நளன், அரிச்சந்திரன், பகவான் ராமர், தர்மர் போன்ற மன்னர்கள் மகாளயப்பட்சத்தை செய்து பெரும் பேறு பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு ஆற்றங்கரை அல்லது கடற்கரை போன்ற ஓடுகிற நீர் இருக்கும் இடங்களைத் தேர்வு செய்வது அவசியமாகக் கருதப்படுகிறது.
தர்ப்பணம் செய்ய உகந்த நேரம்: காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை. ராகுகாலம், எமகண்டம் போன்ற நேரங்களை தவிர்க்க வேண்டும். அதிகாலை 6 மணி முதல் 7 மணி வரை தர்ப்பணம் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
தர்ப்பணம் செய்ய இயலாதவர்கள், அன்னதானம் செய்து பித்ருக்களை வழிபடலாம். இது மிகச் சிறந்த பித்ரு தர்மமாகும்.

















