இந்தியா
காங்கிரஸ் புள்ளிகளின் ட்விட்டர் முடக்கம் எதிரொலி- இந்திய ட்விட்டர் தலைவர் இடமாற்றம்!
காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் ராகுல் காந்தி உட்பட பல முன்னணி காங்கிரஸ் தொண்டர்களின் ட்விட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டதன் காரணமாக ட்விட்டர் இந்திய தலைவர் மனிஷ் தனது பதவியில் இருந்து விலக்கப்பட்டு அமெரிக்காவுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கம் ட்விட்டர் நிறுவனத்தினாலேயே முடக்கப்பட்டது. இது கடந்த இரு நாட்களாகப் பெரும் பரபரப்பான விஷயமாகப் பேசப்பட்டு வருகிறது. ராகுல் காந்தி மட்டுமல்லாது பல மூத்தத் தலைவர்கள், முக்கியத் தொடண்டர்களின் ட்விட்டர் பக்கங்களும் முடக்கப்பட்டன.
இதையடுத்து, “எங்கள் இந்திய அரசியலில் ட்விட்டர் தலையிடுவதா?” என ராகுல் காந்தி கொந்தளித்தார். ட்விட்டரில் மொத்தமாக 5,000-க்கும் அதிகமான காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன. அரசின் கையில் இருப்பதால் அரசியலில் டெக் நிறுவனம் தலையிடுவதா என காங்கிரஸார் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த பரபரப்பான சூழலில் ட்விட்டர் இந்தியத் தலைவர் மனிஷ் மகேஸ்வரியை ட்விட்டர் நிறுவனம் அமெரிக்காவுக்கு இடமாற்றம் செய்வதாக அறிவித்துள்ளது. அமெரிக்க ட்விட்டர் நிறுவனத்தில் ஒரு பிரிவில் மூத்த இயக்குநர் பதவி வழங்கப்பட்டுள்ளது.