வணிகம்
8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பாரதிய மஸ்தூர் சங் (BMS) சார்பில் ஆகஸ்ட் 17ஆம் தேதி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற உள்ளன. டெல்லியில் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெறும் என BMS தேசிய துணைத் தலைவர் மற்றும் ஊடகப் பொறுப்பாளர் பவன் குமார் தெரிவித்துள்ளார்.
இந்த போராட்டத்தில் ஓய்வூதியதாரர்கள் மட்டுமின்றி, தொழிலாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் பல்வேறு திட்டங்களில் பணியாற்றும் ஊழியர்களின் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட உள்ளன.
BMS முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்
திறன்சாரா தொழிலாளர்களுக்கு ரூ.30,000 ஊதியம்:
திறன்சாரா தொழிலாளர்களுக்கான மாத குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.30,000 ஆக நிர்ணயிக்க வேண்டும் என BMS கோரியுள்ளது.
EPS-95 குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500:
ஊழியர் ஓய்வூதியத் திட்டம் 1995-ன் கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும் என்றும், அதனுடன் மாறுபடும் அகவிலைப்படி மற்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டப் பலன்களை இணைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
EPF மற்றும் ESI வரம்பு உயர்வு:
EPF ஊதிய வரம்பை ரூ.15,000-லிருந்து ரூ.30,000 ஆகவும், ESI ஊதிய வரம்பை ரூ.21,000-லிருந்து ரூ.42,000 ஆகவும் உயர்த்த வேண்டும் என BMS வலியுறுத்தியுள்ளது.
ஒப்பந்த ஊழியர்களுக்கு பாதுகாப்பு:
ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம், வேலைப் பாதுகாப்பு மற்றும் நிரந்தர ஊழியர்களுக்கு இணையான பலன்கள் வழங்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
கிராஜுவிட்டி கணக்கீட்டில் மாற்றம்:
பணிமுடிப்புப் பலன் (Gratuity) கணக்கிடுவதற்கான 15 நாள் ஊதியத்தை 30 நாள் ஊதியமாக உயர்த்த வேண்டும் என்றும், இதற்கு உச்சவரம்பு இருக்கக்கூடாது என்றும் BMS கோரியுள்ளது.
இதுதவிர, அங்கன்வாடி, ASHA, மதிய உணவுத் திட்டம், NHM உள்ளிட்ட திட்டங்களில் பணியாற்றும் ஊழியர்களின் மதிப்பூதியத்தை உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் என்ன கோரிக்கைகள்?
இந்திய தொழிலாளர் மாநாட்டை உடனடியாக நடத்த வேண்டும், காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், நிலுவையில் உள்ள ஊதிய ஒப்பந்தங்களை அமல்படுத்த வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், தொழிலாளர் விரோத அம்சங்கள் இருப்பதாக BMS கருதும் தொழில்துறை உறவுகள் விதிமுறைத் தொகுப்பு (IR Code) மற்றும் தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிச்சூழல் விதிமுறைத் தொகுப்பு (OSH&WC Code) ஆகியவற்றுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கோடிக்கும் அதிகமான திட்டப் பணியாளர்களுக்காக தனிக் கொள்கை உருவாக்க வேண்டும் என்றும் BMS கோரியுள்ளது. ஊதிய மோசடியில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஆள்சேர்ப்பு நிறுவனங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
போராட்டம் ஏன்?
தொழிலாளர் சட்டங்கள் தொடர்பான தொழிற்சங்கங்களின் கவலைகளைத் தீர்ப்பதாக அரசு முன்பு உறுதியளித்திருந்தாலும், பல்வேறு கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என BMS தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஓய்வூதிய உயர்வுக்கு நிதிச்சுமை ஒரு காரணமாகக் கூறப்பட்டாலும், EPF ஓய்வூதிய நிதியில் உள்ள தொகை மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என BMS வலியுறுத்தியுள்ளது.










