இந்தியா
இனிமேல் பான் கார்டு தேவையில்லையா? பட்ஜெட்டில் வருகிறது முக்கிய அறிவிப்பு!
அனைத்து விதமான பணப்பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு கட்டாயம் என்று தற்போது நடைமுறையில் உள்ள நிலையில் இன்னும் சில மாதங்களில் ஒரு சில பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு தேவை இல்லை என்ற அறிவிப்பு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் வங்கியில் பணம் செலுத்தினால் அல்லது வங்கியிலிருந்து பணம் பரிவர்த்தனை செய்தால் பான் கார்டு அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் பிக்சட் டெபாசிட் செய்யும் போதோ ஆர்டி ஆரம்பிக்கும் போது பான் கார்டு அவசியம் என அனைத்து வங்கிகளும் கூறிவருகின்றன.
மேலும் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் நகைகள் வாங்கினாலும் பான்கார்டு எண்ணை குறிப்பிட வேண்டும் என நகைக்கடைக்காரர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் ஒருசில பரிவர்த்தனைகளுக்கு இனி பான் கார்டு தேவையில்லை என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட போவதாகவும், வரும் 2023 – 2024 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
வங்கிகளில் மோசடிகள் மற்றும் வரி ஏய்ப்புகளை தடுப்பதற்காகத்தான் பான் கார்டு எண் வழங்கப்பட்டு அந்த எண் பயன்படுத்தப்பட்டு வந்தது என்பது தெரிந்ததே. ஆனால் தற்போது அனைத்து பான் கார்டுகளும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு விட்டதால் ஆதார் எண் மூலமே அனைத்து விதமான பரிவர்த்தனைகளை கண்காணிக்க முடியும் என்றும் அதனால் தனியாக பான் கார்டை கேட்பது அவசியமற்றது என்றும் கூறப்பட்டு வருகிறது.
எனவே வாரம் 2023 – 2024 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பரிவர்த்தனைகளில் பான் கார்டு தேவை இல்லை என்று அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பான் கார்டுக்கு பதிலாக ஆதார் எண் மட்டும் பதிவு செய்தால் போதும் என்ற நிலை ஏற்படும்.