இந்தியா
தமிழகத்தில் மட்டுமல்ல.. பீகாரிலும் நீட் தேர்வு அழுத்தத்தால் தற்கொலை முயற்சி: அதிர்ச்சி சம்பவம்
தமிழகத்தில் நீட் தேர்வு அச்சம் காரணமாக பல மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது தமிழகத்தை அடுத்து பிகாரிலும் தற்கொலை முயற்சி மற்றும் தற்கொலைகள் தொடர்ச்சியாக நடந்து வருவது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி கடந்த 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் தமிழகம் மட்டும் இன்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரி தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்த நிலையில் அனிதா உச்சநீதிமன்றத்தில் சென்று வழக்கு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை என்பதை அடுத்து அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அடுத்து ஒவ்வொரு ஆண்டும் சில மாணவ மாணவிகள் நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து வருகின்றனர் என்பதும் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே நீட் தேர்வு அச்சம் காரணமாக பல மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது பீகார் மாநிலத்திலும் 20 வயது மாணவி ஒருவர் நீட் தேர்வு அழுத்தம் காரணமாக தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள ஜவஹர் நகர் என்ற பகுதியில் அறை எடுத்து தங்கி நீட் தேர்வு பயிற்சி வகுப்பில் மாணவி ஒருவர் படித்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களாக அவர் நீட் தேர்வுக்கான பயிற்சியில் படித்து வந்த நிலையில் அவரது தந்தை நீட் தேர்வுக்கு சரியாக படிக்க வேண்டும் என அவ்வப்போது அறிவுரை கூறியதாக தெரிகிறது. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான அந்த மாணவி தன்னைத் தானே தீக்குளித்துக் கொண்டதாகவும் 60% தீக்காயங்களுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அந்த மாணவியின் தந்தை சஞ்சய் என்பவர் உடனடியாக தனது சொந்த ஊரிலிருந்து ஜவஹர் நகருக்கு சென்று தனது மகளை பார்த்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். நீட் தேர்வில் கவனம் செலுத்துமாறு அவரது தந்தை பலமுறை கேட்டுக்கொண்டதை அடுத்து மன அழுத்தம் காரணமாக அந்த மாணவி தற்கொலை முயற்சியில் இறங்கியதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நீட் தேர்வு இல்லாமல் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவர் படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டது. ஆனால் நீட் தேர்வு என்ற முறை வந்த பிறகு நாடு முழுவதும் இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தாலும் தமிழ்நாடு மட்டுமே நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது பீகாரிலும் தற்கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளதால் பீகார் மாநிலத்தில் உள்ள சமூக ஆர்வலர்களும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னால் நீட் தேர்வுக்கு தயாராகிய மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்த நிலையில் இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் பிரச்சனையாக வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.