இந்தியா
மூன்றே நிமிடங்களில் 3.4 கிலோ தயிர் சாப்பிட முடியுமா? ஒரு வித்தியாசமான போட்டி!

பீகார் தலைநகர் பாட்னாவில் ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தி தினத்தில் தயிர் சாப்பிடும் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் மூன்றரை நிமிடத்தில் 3.4 கிலோ தயிர் சாப்பிட்ட ஒருவர் பரிசு பெற்றுள்ளார்.
நம்மூரில் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு உள்பட பல்வேறு போட்டிகள் வைக்கப்படுவது போல் பீகாரில் ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தி தினத்தில் தயிர் சாப்பிடும் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி ஆண்கள், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் என மூன்று வகையாக பிரித்து நடத்தப்படுகிறது.
ஒவ்வொருவருக்கும் தயிர் சாப்பிட கால அவகாசம் மூன்று நிமிடங்கள் என்றும் அவர் மூன்று நிமிடங்களில் எத்தனை கிலோ தயிர் சாப்பிடுகிறார்கள் என்பது தான் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சவாலை எதிர்கொண்ட பலர் போட்டியில் பங்கேற்றனர் என்பதும் மூன்று நிமிடங்களில் அதிகமாக தயிர் சாப்பிட்டவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 10 ஆண்டுகளாக பாட்னாவில் இந்த தயிர் சாப்பிட போட்டி நடத்தப்பட்டு வருவதாகவும் ஒவ்வொரு ஆண்டும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுவதாகவும் இந்த போட்டியை நடத்தும் பாட்னா டெய்ரி என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தயிர் சாப்பிடும் போட்டி நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற்றது.
மொத்தம் 3 மணி நேரம் நடந்த இந்த போட்டியில் ஏராளமான கலந்து கொண்டனர். பீகாரின் பல பகுதிகளில் இருந்து இந்த போட்டிக்காக பாட்னா வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மகளிர் பிரிவில் பாட்னாவை சேர்ந்த திவாரி என்பவர் மூன்று நிமிடத்தில் 2.718 கிலோ கிராம் தயிர் சாப்பிட்டு முதல் பரிசை வென்றார். இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்ற மது குமாரி மற்றும் நேர்குமாரி ஆகியோர்களும் இரண்டு கிலோவுக்கும் அதிகமாக தயிரை சாப்பிட்டனர்.
அதேபோல் ஆண்கள் பிரிவில் அஜய்குமார் என்பவர் மூன்று நிமிடங்களில் 3.420 கிராம் தயிர் சாப்பிட்டு முதல் இடத்தை பெற்றார். மூத்த குடிமக்கள் பிரிவில் 3 கிலோ 647 கிராம் தயிர் சாப்பிட்டவர் முதல் பரிசை பெற்றார்.
தயிர் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்றும் தயிர் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சியாகும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் இந்த தயிர் சாப்பிடும் போட்டி நடத்தப்படுகிறது என்று இந்த போட்டியை நடத்தும் நிறுவனத்தினர் தெரிவித்தனர். இந்த போட்டி குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.























