தமிழ்நாடு
வாக்காளர்களுக்கு ரூ.2000 போலி டோக்கன் கொடுத்த அமமுக பிரமுகர்; அதிர்ச்சியில் கும்பகோண மக்கள்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக கடந்த 6 ஆம் தேதி, சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடந்து முடிந்தது. தேர்தலையொட்டிப் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வாக்காளர்களுக்கு நூதன முறையில் பணப் பட்டுவாடா செய்தனர்.
இந்த முறை தேர்தலில் புதிதான ஆன்லைன் மொபைல் பணப் பரிமாற்ற செயலிகள் மூலம் பணப் பட்டுவாடா ஜரூராக நடந்தன. ஓட்டுக்கு இப்படிப் பணப் பட்டுவாடா கொடுக்கும் விஷயத்தை தேர்தல் ஆணையம் தடுக்கத் திணறியது. இந்நிலையில் கும்பகோணத்தில் பணப் பட்டுவாடா செய்ய டோக்கன் கொடுத்து அமமுக நிர்வாகி ஒருவர் நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
கும்பகோணம் தொகுதியில் சில பகுதிகளில் அண்மையில் வாக்காளர்களுக்கு மளிகைக் கடையின் பெயருடன் ரூ.2,000 என அச்சிடப்பட்டு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது. இந்த டோக்கனுடன் கும்பகோணம் பெரிய கடைத் தெருவில் உள்ள மளிகைக் கடை ஒன்றுக்குப் பலரும் சென்று ரூ.2,000-க்கு பொருட்களைக் கேட்டனர்.
ஆனால், இந்த டோக்கனுக்கும் எங்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை எனக் கடை உரிமையாளர், கடைக்கு வந்தவர்களிடம் கூறி அவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டார். மேலும் கடை வாசலில் வேட்பாளர்கள் கொடுத்த டோக்கனுக்கும் எங்களுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை என்றும், இந்த டோக்கனுக்கு எங்கள் கடை எந்தப் பொறுப்பும் ஏற்காது எனவும் அச்சிட்டு ஒட்டினார்.
இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் கொரநாட்டுக் கருப்பூரைச் சேர்ந்த அமமுக கிளை கழகச் செயலாளர் கனகராஜ் (62) மீது கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















