இந்தியா
26 நாட்களில் 470 குழந்தைகளுக்கு கொரோனா! எந்த நகரில் தெரியுமா?

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மிக வேகமாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது என்பதும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மட்டும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அதிர்ச்சிக்குரிய செய்திகளாக உள்ளன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் மிக அதிகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது என்றும் குறிப்பாக பெங்களூர் நகரில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் நகரத்திற்குள் வரும் வெளிமாவட்ட மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் கொரோனா வைரஸ் நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே உள்ளே நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று பெங்களூர் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பெங்களூரில் கடந்த 26 நாட்களில் 470 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் நகரில் மார்ச் 1-ஆம் தேதி முதல் 26ம் தேதி வரையிலான 26 நாட்களில் 10 வயதுக்கு உட்பட்ட 470 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
சமீபத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டது மற்றும் பொது இடங்களில் மக்கள் குழந்தைகளுடன் சர்வசாதாரணமாக கூடுவதுமே இதற்கு காரணம் என்று மாநகராட்சி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

















